பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்களுடன் இணைந்து பார்த்த வீடியோவை நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா,நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.  இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.






5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் தொடர் விடுமுறையால் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ரசிகர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் படம் பார்த்த ரசிகர்களும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இதனிடையே உலகம் முழுவதும்  பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் ரூ.80 வசூலை எட்டியுள்ளதாக நேற்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இந்நிலையில் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ள சரத்குமார் நாகர்கோவிலில் ஷூட்டிங்கில் பங்கேற்ற நிலையில், காவல்கிணறில் அமைந்துள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது ரசிகர்களுடன் சரத்குமார் செல்ஃபி எடுத்தும், உரையாடிய வீடியோவையும் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.