பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில், நடிகர் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.  மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா, லொள்ளு சபா சேஷு, ஜாக்குலின் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் கலக்கலான காமெடி படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில், பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. 


 



ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பு :


தெலுங்கில் ஏராளமான படங்களை தயாரித்துள்ள பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம், தொடர்ச்சியாக 65 நாட்கள் ஷெட்யூல் போட்டு படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சந்தானம் பேசுகையில் "கே.ஜி.எஃப், பாகுபலி போன்ற படங்களில் நடிக்கும் போது யஷ், பிரபாஸ் போன்ற நடிகர்கள் பெரிய ஹீரோவாக இல்லை. தயாரிப்பாளர்கள் படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்து எடுத்து அதன் மூலம் வெற்றியும் கண்டார்கள். கதையை நம்பி படம் எடுப்பவர்கள் என்றுமே தோற்றதில்லை. அதை போல இந்த படத்தின் கதையும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெரும்" என்றார் சந்தானம்.


ஆர்யா கொடுத்த சர்ப்ரைஸ் :


'வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர்  ஆர்யாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி படம் ஒன்றில் மிக விரைவில் நடிக்க இருக்கிறோம் என சர்ப்ரைஸ் தகவல் ஒன்றை கூறினார். 


 



தங்க முட்டையிடும் வாத்து :


அதை தொடர்ந்து சந்தானம் நடிகர் ஆர்யா பற்றி பேசுகையில் "ஆர்யா எப்போது என்னை சந்தித்தாலும் என்னுடைய உடம்பை தான் முதலில் பார்ப்பான். எங்காவது சதை போட்டு இருந்தா உடனே திட்டுவான். நியூ இயர் கொண்டாட்டத்திற்காக பார்ட்டி போகலாம் என அழைத்ததற்கு என்னை ஜிம் போக வைத்துவிட்டான். நான் எந்த ஃபைனான்ஸியரை பார்க்க போனாலும் ஆர்யாவை பற்றி விசாரிப்பார்கள். அதே போல ஆர்யாவை பார்த்தால் என்னை விசாரிப்பார்கள். எங்களை அவர்கள் நலம் விசாரிக்கவில்லை. அந்த அளவுக்கு நாங்கள் அவர்களிடம் கடன் வாங்கி இருக்கிறோம். படம் நடிக்கிறோமா? படம் நல்லா ஓடுதா? பணம் வருமா? என்பதை தான் அப்படி விசாரிக்கிறார்கள். 


ஒருமுறை தங்க முட்டை போடுற வாத்து சிக்கி இருக்கு என சொல்லி ஒருத்தரை சென்று சந்தித்தோம். வாத்து முட்டை போடுதா என பின்னாடி கை வைத்து பார்த்தால், எங்களுக்கு தான் ரத்தம் வருகிறது. அந்த வாத்து யாருனு நீங்களே யோசிச்சு பாத்துக்கோங்க" என பேசி இருந்தார் சந்தானம்.