அடிமையாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது உன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றால் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சாய் தீனா தெரிவித்துள்ளார். 


வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி அளிக்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “என்னை வில்லன் நடிகர் என இந்நிகழ்ச்சியில் சொன்னார்கள். இந்த சமூகத்தில் இருக்கும் பாதி பேர் வில்லனாக தான் நமக்கு எதிராக இருக்கிறார்கள். இதனை சொன்னால் வேற மாதிரி எடுத்துக் கொள்கிறார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், கொடூரம் நடந்தாலும் ஜஸ்ட் லைக் தட்ன்னு கடந்து போயிடுவோம்.


நம்ம பிரச்சினையே அதுதான். சூடு, சொரணை இல்லாத ஆட்கள் நாம். அப்படி உணர்வு இருக்கிறவர்கள் கொஞ்சம் இறங்கி சமூகத்துக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நானும் சூடு, சொரணை இல்லாதவன் தான். 30 வயசு வரைக்கு பின்னால் நம் வாழ்க்கையை திரும்பி பார்த்தோமே என்றால் நோய் இல்லாமல் வாழனும், நல்ல சாப்பாடு கிடைக்கணும், சாப்பிட்டு சாகணும் தான் நினைப்போம். ஆனால் சாதி இல்லாமல் இருக்கணும், சாதி இல்லாமல் சாகணும்ன்னு நினைக்கிறோமா?. எல்லோரும் பெருமை பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். 


அரசும், அரசு சார்ந்து இருப்பவர்களும் நிவாரணம் வழங்கி இழப்பீடை சரி செய்யவே நினைக்கிறது. பட்டாசு வெடிக்கக்கூடாது என சொல்றோம், நாட்டு வெடி தயாரிக்க கூடாது என சொல்றாங்க. இதுவரை எத்தனையோ பேர் இறந்துருக்காங்க, இன்னும் தீபாவளிக்குள்ள எத்தனை பேர் இறக்க போறாங்கன்னு தெரியல. இதுதொடர்பாக அரசு சட்டம் கூட போட்டுருக்கு. ஆனால் பணத்தை கொண்டு அதனை சரி செய்கிறோம். பட்டாசு ஆலை உரிமையாளர்களை கைது செய்யவோ, பேக்டரிக்கு சீல் வைக்கிறதோ எதுவும் நடக்கறது இல்லை.


அதே மாதிரி தீண்டாமை பெரும் குற்றம் என சொல்கிறோம். இன்னும் தீண்டாமை நடந்துக்கிட்டே இருக்குது. இந்த அரசு சிரிச்சிகிட்டே எங்க ஆட்சியில எல்லாமே சரியா நடக்குதுன்னு சொல்வாங்க. ஆனால் மேலாதிக்க சித்தாந்ததை கொண்ட மனிதர்கள் இருக்கும் வரை  எந்த ஆட்சி வந்தாலும் தீண்டாமை பிரச்சினைக்கு விடுதலையே கிடையாது. எல்லாவற்றிற்கும் சமரசம் பேசிக் கொண்டிருக்கும் அடி முட்டாள்கள் நாம். ரொம்ப பேசியதால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 


ஒரு மிருகத்தை அடித்தால், திரும்ப அந்த இடத்துக்கு போனால் அடி விழும் என தெரிகிறது. ஆனால் மனிதனுக்கு தெரியவில்லை. அடிமையாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது உன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றால் அவர்களை படிக்க வைக்க வேண்டும்” என அந்நிகழ்ச்சியில் சாய் தீனா தெரிவித்தார். 




மேலும் படிக்க: Madurai: கல்லூரியில் நடந்த 'வள்ளி திருமண நாடகம்'.. கிராமிய இசையை ரசித்து கை தட்டிய மாணவர்கள்!