தளபதி படத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் 40 ஆண்டுகளாக  திரையில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரின் கேரியரில் பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், பல படங்கள் ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸூம் செய்யப்படுவது வழக்கம். நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என சினிமாவில் தனது திறமையை ரஜினி நிரூபித்துள்ளார். தற்போது கூட நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் “ஜெயிலர்” படத்தில் நடித்து வருகிறார். 


சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகைகள் தமன்னா,  ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோடை விடுமுறையாக ஜெயிலர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் “லால் சலாம்” படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கிறார். 


 தளபதி படம் 


1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த்சாமி, ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்ட பலரின் நடிப்பிலும் வெளியான படம் “தளபதி”. இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் ரஜினியின் கேரியரில் பெஸ்ட் படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. மகாபாரதக் கதையில் வரும் கேரக்டர்களின் பின்னணியைக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டது. பாடல்கள் கூட இன்றளவும் அனைவரும் கேட்கும்படி தனது இசையால் இளையராஜா ரசிகர்களை கட்டிப்போட்டிருப்பார். 


அந்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி படம் வெளியானது. மணிரத்னத்துடன் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம் தளபதி மட்டும் தான். மீண்டும் இந்த காம்போ இணையவேயில்லை. இதனிடையே தளபதி படத்தின் போது நடிகர் ரஜினிகாந்த் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், “இது தனது தனிப்பட்ட கடிதம் என்றும், தளபதி படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு வர வேண்டுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் இந்த படமானது திரையிடப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.