ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கழுகு - காகம் கதை சொன்ன ரஜினி, அதற்கு முன்னால் ஒரு நிகழ்ச்சியில் குரங்கு கதை ஒன்றை கூறியிருந்தார். அது பற்றி காணலாம். 


சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமான “ஜெயிலர்” உருவாகியுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி என முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். ஜெயிலர் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


கழுகு - காகம் கதை


இப்படியான நிலையில் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த ஜூலை 28 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், வழக்கம்போல தனது வாழ்க்கை அனுபவங்களை அறிவுரையாக ரசிகர்களுக்கு வழங்கினார். அப்போது அவர், கழுகு - காகம் தொடர்பான கதையை பேசினார். அதாவது, “என்னதான் காகம் தொந்தரவு செய்தாலும் கழுகு அமைதியாக தான் இருக்கும். ஆனால் கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது. அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்” என தெரிவித்தார். 


இது சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இது தொடர்பாக கருத்து மோதல் சம்பவங்களும் நிகழ்ந்தது. இப்படியான நிலையில் ரஜினியின் பழைய வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் கடந்தாண்டு நடந்த ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், குரங்கு கதை ஒன்றை தெரிவித்தார். 


குரங்கு கதை


இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, “சில பேரு இருக்காங்க. வாழ்க்கையில ஒரு துன்பம் நடந்துட்டா அதுலேயே மாட்டிகிட்டு ஆண்டுகள் பல ஆனாலும் மாறாமல் இறந்து போகிறார். இதை சொல்லும் போது ஒரு குரங்கு கதை தான் நியாபகம் வருகிறது. இளநீருக்குள் தேங்காய் இருப்பது குரங்குகளுக்கு தெரியும். அதனுள் கையை லாவகமாக விட்டு உள்ளே இருக்க தேங்காயை எடுக்கும். ஆனால் கையை குவித்து வெளியே எடுக்கும்போது வேறு கோணத்தில் எடுப்பதால் வெளியே வராது. அது கத்தும்,போராடும்.  இரத்தம் எல்லாம் வரும். ஆனால் உள்ளே இருக்கும் தேங்காய்காக விடாமல் இருக்காது. கடைசியில எதுவும் வேலைக்கு ஆகலைன்னு அதனை விடும்போது கை ஆட்டோமேட்டிக்கா வெளியே வந்துரும்.  


அதேமாதிரி நாம இந்த சம்சாரத்துல மாட்டிகிட்டு இவன் அப்படி, அவன் அப்படி, அது, இது, அந்த ஆசை, இந்த கோயில், அந்த கோயில், இப்படி போ, அப்படி போன்னு சொல்லிட்டு இருக்கோம். ஒரு பிரச்சினையை விட்டுட்டா அது தானா சரியாயிடும்” என தெரிவித்துள்ளார்.