நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தில் இருந்து 3வது பாடல் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


ஜெயிலர் படம் 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி  உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது. இதனிடையே  ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அடுத்தடுத்து வெளியாகும்  அப்டேட்டுகள் 


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இந்த படத்தில்  ‘முத்துவேல் பாண்டியன்’ என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடிக்கிறார். படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்  கடந்த ஜூலை 6 ஆம் தேதி “காவாலா” பாடல் வெளியானது. இந்த பாடல் எதிர்பார்த்ததை விட அதிரிபுதிரி ஹிட்டானதோடு யூட்யூப்பில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து ஜூலை 18 ஆம் தேதி இரண்டாவது பாடலாக ‘ஹூக்கும்’ வெளியானது. சூப்பர் சுப்பு எழுதிய இப்பாடலின் வரிகள் ரஜினியின் மாஸ் என்ன என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்த பாடலின் தொடக்கத்தில் ரஜினியின் குரலில் பன்ச் வசனங்கள் இடம் பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதேசமயம் பாடலின் வரிகள் விஜய், அஜித் ஆகியோரை சீண்டும் வகையில் இருந்ததாகவும் சர்ச்சை எழுந்தது. 


வரும் ஜூலை 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி நிகழ்ச்சி நடக்கவுள்ளது ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்த செய்துள்ளது. 


அடுத்த பாடல் இதோ.. 


இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூன்றாவது பாடலாக ‘ஜூஜூபி’  நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரில் ரத்தம் படிந்த அரிவாள் ஒன்றை கையில் பிடித்திருக்கும் போட்டோ இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை சூப்பர் சுப்பு எழுதிய நிலையில் பாடகி தீ பாடியுள்ளார்.