நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக  அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தும், பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும்,  இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 


விறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு


கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது.  இதனையடுத்து படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக்கை படக்குழு செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இதுவரை ஜெயிலர் படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளன்று ஜெயிலர் படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது.






இதில் ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஜெயிலர் படமானது வரும் மே மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. 


ஜெயிலரில் மோகன்லால் 


இந்நிலையில் ஜெயிலர் படத்தில் இருந்து சூப்பரான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி மலையாள திரையுலகின் Complete Actor என கொண்டாடப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன்லால்  இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. படப்பிடிப்பில் மோகன்லால் பங்கேற்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது. அவர் என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.