கலைஞர் 100 விழாவில் பங்கேற்ற நடிகர் வடிவேலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக  தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ரஜினிகாந்த், கமல்ஹாசன்தனுஷ், சூர்யா, நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், முத்துக்காளை, சாக்‌ஷி அகர்வால், இயக்குநர் பா.ரஞ்சித் என முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். 






மிக பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபனும் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நடிகர் வடிவேலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால்? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!” என  தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


பார்த்திபன் - வடிவேலு கூட்டணி 


தமிழ் சினிமாவில் ஹீரோ- ஹீரோயின், ஹீரோ - இயக்குநர் கூட்டணியைப் போல ஹீரோ - காமெடியன் கூட்டணி என்பது மிகப்பிரலமானது. இதில் பார்த்திபன் - வடிவேலு கூட்டணி பற்றி சொல்லவா வேண்டும். இருவரும் முதன்முதலாக சேரன் இயக்குநராக அறிமுகமாகிய பாரதி கண்ணம்மா படத்தில் இணைந்து நடித்தனர். அதில் இவர்கள் காமெடி மிகப்பெரிய அளவில் மிகப்பிரபலமானது. தொடர்ந்து இருவரும் இணைந்து வெற்றிக்கொடி கட்டு, குண்டக்க மண்டக்க, காதல் கிறுக்கன், காக்கை சிறகினிலே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளனர். தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் வடிவேலு முழுவீச்சில் நடிக்க தொடங்கியுள்ளார். பார்த்திபனும் தற்சமயம் வித்தியாசமான கதைகளை இயக்கி பல விருதுகளை குவித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் மீண்டும் முழுக்க முழுக்க காமெடி காட்சிகள் அடங்கிய படத்தில் நடிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: Parthiban: கலைஞர் 100 விழாவில் பார்த்திபன் செய்த செயல்.. கடைசி வரை வெளியே தெரியாமல்போன சம்பவம்..!