பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி(Premgi), சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சத்தம் போடாதே உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களிலும் பிரேம்ஜி நடித்துள்ளார். 



இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தன. தற்போது தன் அண்ணன் வெங்கட்பிரபு தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


பிரேம்ஜி நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பிரபல இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதாவது கடைசியாக மன்மத லீலை என்ற படத்திற்கு இசையமைத்தார்.மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.

பிரேம்ஜிக்கு தற்போது 44 வயதாகும் நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல்  சிங்கிளாகவே இருக்கிறார். கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார். ஆனால் பிரேம்ஜியோ அந்த முடிவுக்கு செவிசாய்த்ததாக தெரியவில்லை. ஆனால், பிரேம்ஜியின் அப்பா கங்கை அமரன் பிரேம்ஜிக்கு திருமணத்தை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரேம்ஜி (ஜனவரி 1) நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில், “புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்” என்று பதிவிட்டுள்ளார்.  இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.