GOAT Prashanth : தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். 


ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் அதன் ஷூட்டிங் சென்னையை சுற்றிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் உடன் பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன், யோகி பாபு, விடிவி கணேஷ், சினேகா, லைலா என மிகப்பெரிய திரைப் பட்டாளமே நடித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 




GOAT படத்தில் நடிகர் விஜய் நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டாப் ஸ்டார் பிரஷாந்த். 90ஸ் கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட்டான நடிகராக வலம் வந்த நடிகர் பிரஷாந்த், தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை படைத்தார். நடிகர் அஜித், விஜய் உள்ளிட்டோர் அறிமுகமான சமயத்தில் உச்சபட்ச நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரஷாந்த், ஒரு காலகட்டத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 


பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'அந்ததுன்' திரைப்படத்தில் தமிழ் ரீ மேக் உரிமையை தியாகராஜன் கைப்பற்றினார். நடிகர் பிரஷாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், வனிதா உள்ளிட்டோரின் நடிப்பில் 'அந்தகன்' என்ற பெயரில் உருவான அப்படத்தின் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முழுவதுமாக முடிவடைந்தும்,  வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டே வருகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. 




இந்நிலையில் நடிகர் பிரஷாந்த், விஜய் நடிக்கும் GOAT படத்தில் இணைந்துள்ளது அவரின் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அவர் துணை கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி சம்மதம் அளித்தார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. ஹீரோக்கள் மத்தியில் ஈகோ கிளாஷ் ஆவது வழக்கமான ஒன்று. பான் இந்தியன் படங்கள் மல்டி ஸ்டாரர் படங்களாக வெளியாவது ஆரோக்கியமான ஒன்று தான். விஜய் - பிரஷாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அதனால் வெங்கட் பிரபு சொன்ன கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரஷாந்த் நடிக்க வாய்ப்பு வந்ததால் அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.


தன்னுடைய படங்களை அவரே தான் தேர்ந்து எடுப்பார் என்றும் அதில் அவரின் அப்பா தலையிடமாட்டார் என்றும் தெரிவித்து இருந்தார். ஒரு சில நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மட்டுமே அவர் மறுத்துள்ளார் என பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் குறிப்பிட்டு இருந்தார்.