தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று கொண்டாடப்படும் நடிகை சினேகா பல திரைப்படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு வெகு விமர்சையாக திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் மற்றும் அன்பின் அடையாளமாக விஹான் ஆத்யா என ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அவ்வப்போது அவர்களின் குழந்தைகள் மற்றும் கூடும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது  இவர்களின் வழக்கம்.


இன்ஸ்டாக்ராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்த குடும்பம் தங்களது மகிழ்ச்சியை  பகிர்வது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சினேகா பிரசன்னா தம்பதியின் மூத்த மகன் விகானின் ஏழாவது பிறந்தநாள் இன்று விஹானின் பிறந்தநாள் பதிவாக இன்ஸ்டாகிராமில் பிரசன்னா தன் மகனுடனும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அழகிய சிறு குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். 


அன்பு மகனுக்கு தந்தையின் வாழ்த்து !






பிரசன்னா வேஷ்டி சட்டையில் மகன் விஹானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், இருவரும் கட்டி அணைத்து முத்தமிடும் புகைப்படங்களையும், விஹான் தன் தங்கை ஆத்யாவிற்கு முத்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார், நடிகர் பிரசன்னா. இந்த புகைப்படங்களை பகிர்ந்து அதன் கீழ் சிறு அழகிய பிறந்தநாள் பதிவையும் பதிவிட்டுள்ளார்.


அதில் அவர் குறிப்பிட்டதாவது, ''அன்புள்ள பட்டப்பா! என் வாழ்விற்கு புதிய அர்த்தம் நீ கொடுத்துள்ளாய். உனக்கு ஒரு நல்ல தந்தையாகவும் நீ பார்த்து வளர ஒரு நல்ல மனிதனாகவும் நான் இருக்க வேண்டும். நான் உனது தோழனாக எப்போதும் உனக்கு பக்க பலமாய் இருப்பேன். இந்த பிரபஞ்சத்தை விட அதிகமாக உன்னை நான் விரும்புகிறேன். இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும்!'' என்று தந்தை பிரசன்னா தன் மகன் விஹானிற்கு பிறந்தநாள் வாழ்த்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


தந்தை என்பவர் தன் மகன் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒரு ஆண்மகனாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்த வரிகளை அவர் தனது மகனுக்கு   எழுதியுள்ளார்.  பெற்றோர் தன் குழந்தைகளுக்கு ஒரு நண்பர் போல இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அவர் உள்வாங்கி இருப்பது இங்கே வெளிப்படையாக தெரிகிறது.  இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் சினிமா நட்சத்திரங்களும் சினேகா பிரசன்னாவின் மகன் விஹானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


பிறந்தநாள் வாழ்த்துக்கள் விகான்!