"வேலு பிரபாகரனைத் தவிர யாராலும் இதைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது... இந்தத் திரைப்படம் வந்திருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்..." முகநூலில் இவ்வாறு ஒருவர் பதிவிட, அதை தன் பக்கத்தில் ஷேர் செய்து நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் வேலு பிரபாகரன்.






முகநூலில் பதிவிட்டுள்ள நபர் "இந்தப் புகைப்படம் ஒரு அரிதான ஒன்று... வரலாற்றில் ஆரியக் கலப்பிற்கு முன்பு ஒரு தமிழ் மன்னன் எப்படி இருப்பான் என்ற ஒரு பிம்பத்தை இப்படி சீமானை தவிர வேறு யாராலும் முழுமை செய்ய முடிந்திருக்காது. (நரகாசூரன் ).. வேலு பிரபாகரனைத் தவிர யாராலும் இதைக் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது... இந்தத் திரைப்படம் வந்திருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும்... ஆனால் என்ன செய்ய... இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழனால் சரியான வழிகளை அடையாளம் கண்டுகொள்ளமுடியாததனால் தானே, இருட்டில் வழிதவறி நின்றுகொண்டு வழிகளைப் பற்றி வெளிச்சத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்கிறான்" என்று குறிப்பிட்டுள்ளார்.



அரசியல்வாதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நாம் அனைவரும் கண்டிருப்போம், ஆனால் ராஜா போல் கம்பீரமான அலங்காரத்தில் சீமான் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பகிரும் பலரும் கையில் குறும் வாளுடன் நிற்கும் சீமானுக்கு பல வரலாற்று பெயர்களை சூட்டி வருகின்றனர். ஒரு பக்கம் நரகாசுரன், பழுவேட்டையர், தொல்காப்பியர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரை பதிந்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது எந்த கதாபாத்திரத்திற்கான வேடம் என்ற விவரம் தெரியாத ரசிகர்கள் மண்டையை போட்டு உடைத்து கொண்டிருந்தனர். இயக்குநர் வேலு பிரபாகரனின் பதிவு மூலம் அவரின் இயக்கத்தில் வெளியாகவிருந்த ஒரு திரைப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகள் என்பது தெரிய வந்துள்ளது.


ஒரு இயக்குநரின் காதல் டைரி, கடவுள் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் வேலு பிரபாகரன். அவரின் கடவுள் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டிருந்ததாகவும், அந்த இரண்டாவது பாகத்தில் நரகாசுரன் கதாபாத்திரத்தில் சீமான் நடிப்பதற்காக போட பட்ட வேடம் தான் அது, அப்போது எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது திடீரென இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.


ஆனால் இது குறித்து எதிர்கருத்துக்களை பகிர்ந்து வரும் நாம் தமிழர் தொண்டர்களோ பழைய புகைப்படத்தை திட்டமிட்டே தற்போது சிலர் பரப்பும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக பதிவு செய்து வருகின்றனர்.