புரியாத வார்த்தைக்குள் புதிரான அர்த்தங்களை ஒளித்து வைத்து, இசைத்துறையில் புதிய யுக்தியை கையாண்டவர் நடிகரும் , இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி இசையமைத்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.  2005 - 2015 காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள்  BOOM ஆக இருந்திருந்தால் , நிச்சயம் விஜய் ஆண்டனியின் பாடல்களை கொண்டாடவே தனி ஆர்மிகள் உருவாகியிருக்கும். இசையமைப்பாளராக தான் தோற்றுவிட்டதாக எண்ணித்தான், நடிப்பு துறைக்கே தாவியிருக்கிறார் விஜய் ஆண்டனி. ஆனால் பல வருடங்களுக்கு பிறகு சமூக வலைத்தளங்களில் அவரது பாடல்களுக்கான அங்கீகாரம் கிடைக்க துவங்கியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் படம் குறித்து வரும் விமர்சனங்கள் குறித்தும், தான் ஏன் நடிக்க வந்தேன் என்பது குறித்தும் வெளிப்படையாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி.







அதில் "யார் படம் எடுத்திருந்தாலும் அவர்களது அறிவிற்கு ஒன்று செய்திருக்கிறார்கள். அவனை வன்மம்  காட்டி , அழுத்துவதாகத்தான் நான் விமர்சனங்களை பார்க்கிறேன். அவர்களது அறிவிற்கு எட்டும் அளவிற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார்கள் என்றால் அதனை காமெடி செய்து சிரிப்பது, விமர்சிப்பது, அவமானப்படுத்தும் வகையில் பேசுவது இது எல்லாமே  கொலைக்கு சமம். இதை சமூக கொலையாகத்தான் பார்க்கிறேன். இசையமைப்பாளராக எனக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால்தான் நான் நடிக்க வந்துவிட்டேன். நான் இசையமைத்த சமயங்களில் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரிதாக வளரவில்லை. ஆனாலும் எனது பாடல்கள்  வைரல் ஆக வேண்டும் என்ற மெனக்கெடல்களை நான் செய்வேன்.


உண்மையாக வேலை செய்தேன். பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகும். நான் ஏதோ விஷயத்தில் பின் தங்கி இருப்பதாக உணர்ந்தேன். மன அழுத்தமாக இருந்தது, இப்படியே போனால் என்ன ஆவது என நினைத்துதான் நடிக்க வந்தேன். இசையமைப்பாளராக ,எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என நான் வருந்தவில்லை. ஒரு வேளை நமக்கு இந்த வேலை ஒர்கவுட் ஆகாதோ என்றுதான் நடிக்க வந்தேன். நான் வருஷத்துக்கு ஒரு படமாவது இனிமேல் இசையமைக்க வேண்டும் .ஆரம்பத்தில் நான் இசையமைத்த பொழுது எல்லாம் காமெடியாக பார்த்தாங்க. இறுதியாக நான் இந்த சினிமாவை விட்டுவிட்டு முழுமையாக மக்களுக்கு சேவை செய்வதில் இறங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை “ என மனம் திறந்து பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.