மகளிர் ஆணையம் என்ன கிழித்துக் கொண்டிருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொந்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் மன்சூர் அலிகான். தற்போது காமெடி கேரக்டரிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் நடித்த “லியோ” படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்திருந்தார். இதனிடையே கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா பற்றி கொச்சையான பல கருத்துகளை தெரிவித்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 


நடிகை த்ரிஷாவும் மன்சூர் அலிகானை கண்டிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து விளக்கம் அளித்த மன்சூர் அலிகான், “திரிஷாவிடம் தப்பான வீடியோவை காட்டியிருக்கிறார்கள். நான் பெண்களை எப்போதும் மதிப்பவன்” என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் நடிகர் சங்கம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. 


இப்படியான நிலையில், மன்சூர் அலிகான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நான் எந்த பெண்களையும் தவறாக நினைக்க மாட்டேன். எல்லோரையும் அரவணைத்து தான் செல்வேன். தமிழ்நாடே என் பக்கம் தான் உள்ளது. இந்த பூச்சாண்டி வேலைகளுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தை பார்த்து கேட்கிறேன். இதெல்லாம் ஒரு விஷயமா? . மூத்த நடிகர் எஸ்.வி.சேகர், காரைக்குடியில் ஷர்மா குஷ்பூ பற்றி அவதூறு பேசினார்களே. அவர்கள் பாஜகவில் தானே இருக்கிறார்கள்.  கைது பண்ண சொல்ல வேண்டிதானே. நீட் தேர்வுக்கு அனிதா தற்கொலை செய்துக் கொள்ளும் போதும் இந்த மகளிர் ஆணையம் என்ன செய்துக் கொண்டிருந்தது. வெட்கம், மானம், சூடு, சுரணை இருந்தா நீ தூக்கு மாட்டி சாவு. 


மணிப்பூரில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்போது என்ன செஞ்சிட்டு இருந்தீங்க?   என்னுடைய விவகாரத்தில் 4 மணி நேரத்தில் அளித்த அறிக்கையை திரும்ப பெற்று  நடிகர் சங்கம் செய்தது மாபெரும் தவறு. 21 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். 


நேற்றில் இருந்து நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நாசர், விஷால் என யாருக்கு அழைத்தாலும் போனை எடுக்க மாட்டேங்குறாங்க. கார்த்தி போனை எடுத்து பூச்சி முருகனை அழைத்து பேச சொன்னார். அவருக்கு கூப்பிட்டால் போனை எடுக்கவில்லை. மன்சூர் அலிகான் என்றால் இளிச்சவாயனா?. ஒழுங்கா நடந்துகோங்க. நான் எந்திரிச்சா ஒரு பிரளயமே கிளம்பும்” என மன்சூர் அலிகான் தெரிவித்தார்.