ஹேமா கமிட்டி குறித்து நடிகர் மம்மூட்டி 


மலையாள திரையுலக ஆண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கி இருக்கின்றன. இந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஹேமா அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து கேரள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் உட்பட அவரது தலைமையில் இருந்த 17 நபர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தார்கள்.


மேலும் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி இந்த சர்ச்சை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடிகர் மோகன்லால் நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.


ஹேமா கமிட்டியை ஆதரிப்பதாகவும்.பாலியல் புகார்களால் நடிகர்கள் சங்கமான அம்மா மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் பதவியை ராஜினாமா செய்துவிட்டாலும் சங்கத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக மோகன்லால் தெரிவித்தார். 


மெளனம் கலைத்த மம்மூட்டி 


மோகன்லாலைத் தொடர்ந்து தற்போது நடிகர் மம்மூட்டியும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “ ஹேமா கமிட்டியை ஆதரிப்பதாகவும் , மலையாள திரையுலகில் அதிகார மையம் என்று இல்லை . பாலியல் புகார்கள் குறித்து அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்" என மம்மூட்டி தெரிவித்துள்ளார்.



 மோகன்லால் மற்றும் மம்மூட்டி ஆகிய இரு நடிகர்களும் இந்த பிரச்சனை குறித்து தெளிவாக பதிலளிக்காமல் மேலோட்டமான பதில் கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 


ஹேமா கமிட்டி


கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் நடிகர் திலீப் குமாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக இந்த இந்த குழு விசாரணை செய்தது.


விசாரணை அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு கேரள அரசிடம் சமர்பிக்கப்பட்ட பின்பும் இந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்தில் WCC என்கிற பெண்கள் அமைப்பின் மூலம் இந்த அறிக்கையின் முடிவுகளை வெளியிட கேரள அரசுக்கு வலியுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து நடிகைகளின் பெயர்கள் நீங்க இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியிடப்பட்டன. 


இதனைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகர்கள் சித்திக் , ஜேயசூர்யா , முகேஷ் , இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். குற்றம் சுமத்தப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளது கேரள காவல் துறை.