சுந்தர புருஷன், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகனாகவும், வானத்தை போல, கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற ஏராளமான படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் லிவிங்ஸ்டன். இவர் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.


இவருக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார். தந்தையைப் போல நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர் கலாசல் எனும் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். அந்த படம் இன்னும் வெளிவராத நிலையில், அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பூவே உனக்காக என்ற தொடரில் கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த தொடரின் இரண்டு நாயகிகளில் இரண்டாவது நாயகியாக அவர் நடித்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் அந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், திடீரென ஜோவிதா அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.




கடந்த சில மாதங்களாக நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்த ஜோவிதா தற்போது மீண்டும் தொலைக்காட்சி தொடரில் களமிறங்க உள்ளார். அதுவும் தான் ஏற்கனவே நடித்து வந்த சன் தொலைக்காட்சியின் புதிய தொடரில் நாயகியாக நடிக்க உள்ளார். இந்த தொடரில் நடிகர் கார்த்திக் வாசு நாயகனாக நடிக்க உள்ளார். ஜோவிதா நாயகியாக நடிக்க உள்ள இந்த தொடரில் 80களில் நாயகியாக வலம் வந்த அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். கன்னடத்தில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ஒன்றின் மறு ஆக்கமே இந்த தொடர் என்றும் தகவல்கள் வௌியாகியுள்ளது.


மேலும் பல்வேறு செய்திகளை படிக்க : Survivor Tamil: விக்ராந்த்-காயத்ரி மோதல்...வெளியேறும் ராம்... நெகிழ்ந்து போன ரவி...! சத்தமாக சர்வைவர்!




நடிகர் லிவிங்ஸ்டனும் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கண்ணானே கண்ணே என்ற தொடரில் நாயகனின் தந்தையாக நடித்து வருகிறார். முன்னதாக, பூவே உனக்காக தொடரில் இருந்து ஜோவிதா விலகியபோது, நடிகர் லிவிங்ஸ்டன் விளக்கம் ஒன்றை அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், அந்த தொடரில் இருந்து தனது மகள் விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகவும், அதை கூறி அவர்களை நோகடிக்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சூழலில், ஜோவிதா மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நாயகியாக நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் படப்பிடிப்பு பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.


மேலும் பல்வேறு செய்திகளை படிப்பதற்கு : Samatha Akkineni | 'கோவிலுக்குதானே வந்திருக்கேன்.. புத்தி இருக்கா' : செய்தியாளரிடம் சீறிய சமந்தா..