கௌதம் கார்த்திக்


மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கெளதம் கார்த்திக். சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வரவேற்கப் பட்டவர்களில்  கெளதம் கார்த்திக் ஒருவர். ஆனால் இதுவரை அவருக்கு குறிப்பிட்டு சொல்லும் வகையிலான வெற்றிப் படம் அமையவில்லை. என்னமோ ஏதோ , வை ராஜா வை என அவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைகள் பெரியளவில் வெற்றியை தரவில்லை. இதற்கு  இருட்டு அறையில் முரட்டு குத்து , தேவராட்டம் என என சர்ச்சைக்குரிய டைட்டில் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் கெளதம் கார்த்திக். கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் கெளதம் கார்த்திக் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர்  அடுத்தபடியாக நடிக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 


பிறந்தநாளில் புதிய படத்தை அறிவித்த கௌதம் கார்த்திக்


தற்போது கௌதம் கார்த்திக் 'கிரிமினல்' மற்றும் 'மிஸ்டர் எக்ஸ்' என இரண்டு படங்களில்  நடித்து வரும் நிலையில், இப்போது இவர் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் கார்த்திக்கின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இப்புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். எளிய மக்களின் வாழ்வியலையும் அதிகாரத்திற்கு எதிரான அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்யும் இயக்குநர் ராஜு முருகன் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தினா ராகவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.


இப்படம் குறித்து இயக்குநர் தினா ராகவன் கூறும் போது, “தென்சென்னையில் உள்ள தரமணி போன்ற பகுதியில் நடக்கும் உள்ளூர் அரசியலை, எளிமையான சம்பவங்களாலும் உண்மைக்கு நெருக்கமாகவும் அரசியல் நையாண்டிகள் கலந்தும் சொல்ல முயற்சிக்கும் படமாக இதை உருவாக்க இருக்கிறோம். சாமானியனின் எதார்த்த வாழ்வியலோடு அரசியலை சற்று காமெடி கலந்து சொல்வது தான் இந்த படம்.




இந்த படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரத்தை அரசியலில் இருக்கும் ஏரியா பையன் போன்று உருவாக்கி இருக்கிறோம். இதுவரை அவர் நடித்ததில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரமாக இது இருக்கும். அவரது கதாபாத்திரம் நம் வீட்டில் இருக்கும் ஒருவர் போன்ற உணர்வை ஏற்படுத்தும்," என்றார். 


தற்போதைக்கு GK 19 என்ற பெயரில் துவங்கியுள்ள இந்த படத்தை எம்.ஜி.ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே பாபு இணைந்து  தயாரிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். மேலும் விரைவில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த வருடம் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.