நடிகர் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் படத்தின் 2 ஆம் பாடல் வெளியாகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 






துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12  ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.






கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் குறித்து அவ்வப்போது அப்டேட்டுகளோடு புதுப்புது போஸ்டர்களும் வெளிவருவது வழக்கம். இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளையொட்டி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 






இதனைத் தொடர்ந்து  "வீரா சூரா” என தொடங்கும் முதல் பாடல் செப்டம்பர் 7 ஆம் தேதியும், டீசர் செப்டம்பர் 15 ஆம் தேதியும் வெளியானது. சில தினங்களுக்கு இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கிய நிலையில் நானே வருவேன் படத்தின் 2 ஆம் பாடலான “ரெண்டு ராஜா” பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். அவருடன் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து பாடியுள்ளதால் இது அனைவரையும் கவர்ந்துள்ளது.