துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. இப்படம் செப்டம்பர் 29ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
பாசிட்டிவ் வரவேற்பு :
தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ என்றுமே ஒரு அல்டிமேட்டான காம்போவாக தான் இருக்கும். அந்த வகையில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த ஹாரர் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெரும் என ட்விட்டர் மூலம் விமர்சனங்களை பகிர்ந்துள்ளார் ரசிகர்கள். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் இன்று நானே வருவேன் படத்தின் "யாரும் இல்ல..." பாடலின் லிரிகள் வீடியோ இன்று மாலை வெளியிடப்பட்டது. விவேக் எழுதிய இந்த பாடலின் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் அந்தோணி தாசன். இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ஏராளமான வியூஸ், லைக்ஸ் பெற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அற்புதம்.
"நானே வருவேன்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே இப்படத்தின் "வீரா சூரா..." பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குழுவினர் மகிழ்ச்சி :
இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் படத்தை இயக்கியதோடு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்துள்ளார். "பொன்னியின் செல்வன்" திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் நானே வருவேன் படம் வெளியானதால் என்ன நடக்குமோ என தனுஷ் ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாகும் வகையில் படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.