இனிமேல் வெந்து தணிந்தது காடு என சொல்லமாட்டேன் என நடிகரும், சிலம்பரசனின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். 


2001 ஆம் ஆண்டு பிரசாந்த் நடித்த சாக்லேட் படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானர் நடிகர் கூல் சுரேஷ். தொடர்ந்து பல படங்களில் காமெடி, ரவுடி, அடியாள் வேடத்தில் நடித்து வந்த அவர் சந்தானம் காமெடியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரிய அளவில் பிரபலமானார். இவர் நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் புதுப்படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் கூல் சுரேஷை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் காணலாம். 


படம் பார்த்து விட்டு அவர் சொல்லும் கமெண்டுகளை கேட்கவே ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இப்படி திரைக்குப் பின்னால் கூல் சுரேஷ் ரசிகர்களால் கொண்டாடப்பட காரணம் அவர் சொல்லும் வசனம் தான். கடந்தாண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் இயக்கத்தில் மாநாடு படம் வெளியானது. இந்த படத்தின் டைட்டிலை வைத்து கூல் சுரேஷ் ஒவ்வொரு பதிவிலும் “தானே தலைவன் எஸ்.டி.ஆரின் மாநாடு...எல்லாரும் கொஞ்சம் வழியவிடு” என தெரிவித்திருந்தார். 






இதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்க வெந்து தணிந்தது காடு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. உடனே படத்தின் தலைப்பை கொண்டு, “ வெந்து தணிந்தது காடு... என் தலைவன் சிம்புவுக்கு வணக்கத்தைப் போடு” என கிடைக்கும் கேப்பில் எல்லாம் படத்தை ப்ரோமோஷன் செய்தார். அவரின் இந்த டயலாக் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானது. வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்பு, கௌதம் மேனனுக்கு கார், பைக் என பரிசளித்து மகிழ்ந்தார். 


ஆனால் முதலில் இருந்தே படத்தை ப்ரோமோஷன் செய்தது கூல் சுரேஷ் தான். அவரை கௌரவிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்ததை தொடந்து ஐசரி கணேஷ் கூல் சுரேஷூக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்தார்.  பதிலுக்கு ஐசரி கணேஷூக்கு இரண்டு குச்சிமிட்டாயை பரிசாக கூல் சுரேஷ் அளித்தார்.  இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோவில், ஐசரி கணேஷ் தனது குழந்தைகளின் கல்வி செலவை முழுவதும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக கூறியதாகவும் தெரிவித்தார். 


இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படம் முடிந்து அடுத்ததாக டிசம்பரில் சிம்பு நடித்த பத்து தல படம் வெளியாகிறது. இதனால் இந்த படத்திற்கு என்ன வசனம் கூல் சுரேஷ் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்தது.


இந்நிலையில் கூல் சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில், மாநாடு, வெந்து தணிந்தது காடு படத்திற்கு  சிம்புவின் ரசிகராக என்னால் முடிந்த சப்போர்ட்டை செய்தேன். எல்லாமே என் தலைவன் எஸ்.டி.ஆருக்காக தான். எனக்கு வாய்ப்பு கொடுப்பாங்கன்னு அந்த வசனம் நான் சொல்லல. இப்ப அடுத்ததாக பத்து தல படம் வருது. என்ன வசனம் சொல்லப்போறேன்னு எனக்கே தெரியல. ஆனால் நான் ஒன்னு யோசிச்சி வச்சிருக்கேன். நாளைக்கு சொல்றேன். என கூல் சுரேஷ் கூறியுள்ளார்.