குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்தன. புகழ் வலிமை உள்ளிட்ட படங்களிலும், சிவாங்கி டான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.


அதேபோல், இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினுக்கும் படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்து அப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்திருந்தனர்.  அப்படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழாவில்,  “எனக்கு ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு.. எனக்கு கதை பிடிக்கலானா தூங்கிருவேன். நான் இத பெருமைக்காக சொல்லல.. 40 கதை கேட்டேன்.. 40 கதையிலும் நான் தூங்கிட்டேன்” என்று பேசினார். அவரது இந்தப் பேச்சு சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. 






பலரும் அவர் பேசிய வீடியோ எடிட் செய்து ட்ரோல் செய்தனர். சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அடியை வாங்கிய அஷ்வின் அதற்குப்பின் சற்று அமைதியானார். இந்நிலையில் அந்த விவகாரம் நடந்து சில மாதங்களுக்கு 40 கதை விவகாரம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அஷ்வின். தினமலர் இணையப்பக்கத்துக்கான நேர்காணலில் பேசிய அஷ்வின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில்,


''நானும் மனுஷன் தானே. கஷ்டமா இருந்துச்சு. இதே மாதிரி விஷயம். அஷ்வினுக்கு பிறகும் நடக்கும், அஷ்வினுக்கு முன்னாடியும் இது நடந்திருக்கும். எல்லாரும் பாசிட்டிவா இருந்தா தான் எல்லாமும் பாசிட்டவா இருக்கும். அந்த டைம் ஒரு 3 மாசம் நான் டிஸ்டர்பா இருந்தேன். அதுல நிறைய கத்துக்கிட்டேன். பலர் என்னைய ஏமாத்தி இருக்காங்க. அதெல்லாம் எனக்கு தெரியவந்தது. இப்போ நான் கான்பிடண்டா இருக்கேன்.


இதை யாருமே வேணும்னே பண்ணல. எல்லாமே டைம்தான். நான் நானேவே இருந்தேன். என்னுடைய அனுபவத்ததான் நான் சொன்னேன். யாரையும் புண்படுத்த  சொல்லல. இந்தக்கத நல்லா இருக்குனு சொல்றத காமெடி சொல்ல நினைச்சு அப்படி சொன்னேன். நான் எதையும் எழுதி தயார் படுத்திட்டு போகல. நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன். அதை மட்டும் எடுத்து வீடியோ போட்டாங்க. எல்லார்கிட்டயும் நான் எப்படி கன்வே பண்ன முடியும்? ஆனா இது நல்லதுதான்னு நான் 3 மாசம் கழிச்சு பீல் பண்னேன்'' என்றார்.