தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித். உச்சநட்சத்திரமாக திகழும் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியான பிறகு கடந்த ஓராண்டாக அவரது விடாமுயற்சி படம் படப்பிடிப்பிலே இருந்து வருகிறது.


விடாமுயற்சிக்கு பின் தொடங்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், விடாமுயற்சி படம் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டு வந்த நிலையில், பொங்கலுக்கு படம் வெளியாகும் என்று தகவல் வெளியானது.


இந்த சூழலில், துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றார், அவருக்கு லியோ படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜூன், விடாமுயற்சி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை தற்போதுதான் படமாக்கினோம். இந்த படம் இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்றார். இதைக்கேட்ட ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


மகிழ் திருமேனி இயக்கும் இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜூன், நடிகை த்ரிஷா, ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் நடிக்கிறார். நீரவ்ஷா ஔிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெயரும், போஸ்டர்களும் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகாமலே இருந்து வருகிறது.


இந்த நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா இந்த படத்தில் நடித்துள்ளார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. அஜர்பைஜான், துபாய் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


அர்ஜூன் கூறியதன்படி, விடாமுயற்சி படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.