பல காரணங்களால் சினிமாவில் நடிப்பதற்கு வந்த வாய்ப்புகளில் தன்னால் நடிக்க முடியவில்லை என நடிகர் அமுதவாணன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


விஜய் டிவியில் நடித்த பலரும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து பிரபலமாகிவிட்டனர். இன்னும் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் திறமையால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டனர். அவர்களில் ஒருவர்தான் அமுதவாணன். நகைச்சுவை திறமையை அடிப்படையிலேயே கொண்ட அமுதவாணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 


அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன்களில் போட்டியாளர்களில் ஒருவராக அமுதவாணன் பங்கேற்று மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனிடையே அவர் நேர்காணல் ஒன்றில் தான் சினிமாவில் தவறவிட்ட வாய்ப்புகள் பற்றி பேசியுள்ளார். அதில், “நான் அதிகமாக எல்லாருடனும் பழகுவேன். சின்ன வயதில் எனக்கு பேச்சு உச்சரிப்பு என்பது சரியாக வராது. ஆனால் வளர வளர அந்த பிரச்சினை சரியாகி போனது. 6ஆம் வகுப்பு படிக்கும்போதே மிமிக்ரி பண்ண ஆரம்பிச்சேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமுதவாணன் கொண்டாடப்பட வேண்டியவர். அவருக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எங்கேயோ போய்விட்டார்கள் என சொல்வதை கேட்கும்போது கோபமாக வரும்.


ஏனென்றால் சினிமா என்பது நாம் முடிவு பண்ண முடியாதது. 8 வருஷத்துக்கும் ஜோடி சீசன், கலக்கப்போவது யாரு ஜெயித்த உடனே இயக்குநர் பாலா அழைத்து தாரை தப்பட்டை பட வாய்ப்பு கொடுத்தார். என்னுடைய வளர்ச்சி பார்த்து நானே பெருமைப்பட்டேன். ஆனால் அதன்பிறகு என்னால் பெரிய படம் பண்ண முடியவில்லை. என்னை பார்த்து ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கிறார் என்றால் திறமை இருக்கிறது என்பதை தான் பார்க்கிறார்கள். 


தர்மதுரை படத்தில் கஞ்சா கருப்பு கேரக்டர் நான் பண்ண வேண்டியது. அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் எனக்கு தான் முதலில் அட்வான்ஸ் கொடுத்தார். நான் கனடாவில் மாட்டிக்கொண்டதால் நடிக்க முடியவில்லை. அதேபோல் கத்தி சண்டை படம் பண்ண வேண்டியது. அப்போது விஜய் டிவியில் அச்சம் தவிர் கேம் ஷோ பண்ணிட்டு இருந்தேன். அதில் டாப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தேன். அதனால் நடிக்க முடியாமல் போய்விட்டது. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. நேரமின்மை காரணமாக நடிக்க முடியவில்லை. 


பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகப்பட்சம் டாஸ்க் ஜெயிச்சது நான் தான். அதேமாதிரி படத்துல ஜெயிச்சட்டம்னா சந்தோசமா இருக்கும். நான் நடிக்க வந்த புதிதில் நிறைய கஷ்டப்பட்டேன். எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கஷ்டப்பட்டால்தான் ஒரு விஷயம் நடக்கும்ன்னு எனக்கு தெரியும்” என அமுதவாணன் தெரிவித்திருப்பார். 




மேலும் படிக்க: Thalaivar 172: ரஜினிகாந்துடன் இணைகிறாரா மாரி செல்வராஜ்? - இணையத்தில் வைரலாகும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி