நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில், நடிகர் அஜித் குறித்து இடம் பெற்ற வசனம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான இருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக அறிமுகமான சமயம், திருப்புமுனையாக அமைந்த படம் “தில்லுக்கு துட்டு” . இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. இதுவும் வெற்றி பெற தற்போது ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற பெயரில் மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.


பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சந்தானம்,சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன் என பலரும் நடித்துள்ளனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் இரண்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. 


DD Returns Review: சிரிப்பு சரவெடி.. பேய் கதையில் மீண்டும் வென்ற சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் விமர்சனம் இதோ..!


இந்நிலையில் இன்று வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் சந்தானத்திற்கு நல்ல வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே டிவிட்டரில் அஜித் ரசிகர்களால் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வீடியோ கிளிப்ஸ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பேயாக வரும் ப்ரதீப் ராவத், சந்தானம் மற்றும் அவரது நண்பர்களிடம், கேள்வி ஒன்றை கேட்கிறார். 


அதாவது, அஜித் நடித்த தீனா படத்தில் இடம்பெற்ற, ‘உடம்புல மூக்கு இருக்கும்..முழி இருக்கும்..கை இருக்கும்... கால் இருக்கும்.. ஆனால் உயிர் இருக்காது’ என தெரிவிக்கிறார்.அதற்கு சைதை சேது, ‘தல பட டயலாக்’ என கூறுவார். உடனே லொல்லுசபா மாறன், ‘தலன்னு சொல்லாதடா.. ஏ.கே. (AK)ன்னு சொல்லு”  என சொல்லுவார். இதேபோல் பேய் குழந்தையிடம் பொம்மையை காட்டி இன்னொரு இடத்தில் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற “கண்ணான கண்ணே” பாடலை பாடுவார். இப்படி படத்தில் அஜித் ரெஃபரன்ஸ் வைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.