நடிகர் அஜித்தின் துணிவு படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பழைய ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. 


துணிவு பொங்கல்


 இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார்  கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஜனவரி 11 ஆம் தேதி படம் ரிலீசாகவுள்ளது. 






ஏற்கனவே துணிவு படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் பல இடங்களில் முதல் 2 நாட்களான பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது. மேலும் பிரமாண்ட கட் அவுட்கள், நலத்திட்ட உதவிகள் என பெரும் ஏற்பாடுகளை அஜித் ரசிகர்கள் செய்துள்ளனர். இயக்குநர் ஹெச்.வினோத்தும் படம் குறித்து பல நேர்காணல்களில் பேசி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளார். 


வைரலாகும் ட்வீட் 


இதனிடையே 2018 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துணிவு இருந்தால் துக்கம் இல்லை! துணிவு இல்லாதவனுக்கு, தூக்கம் இல்லை! என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை தற்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 






முன்னதாக 2006- 2011 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தது. அப்போது 2010 ஆம் ஆண்டில் அன்றைய திரையுலகினர் இணைந்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” என்ற நிகழ்ச்சியை நடத்தினர். இதில் கலந்து கொண்ட நடிகர் அஜித்குமார், நிகழ்ச்சியில் முதலமைச்சர் உட்பட அனைவரும் இருக்கும்போது, ”இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் அனைவரும் கட்டாயம் வரவேண்டும்” என மிரட்டுவதாக வெளிப்படையாக தெரிவித்தார். மேலும் சினிமாவையும் அரசியலையும் ஒன்று சேர்க்காதீர்கள் என சொல்ல, அஜித்தின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைத்தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.