துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய முடிவு ஒன்றை எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித் நடிப்பில் கடைசியாக வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனைத் தொடர்ந்து இதே கூட்டணி தற்போது “துணிவு” என்ற படத்தில் இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கும் நிலையில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். 


வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் அதே நாளில் விஜய் நடிக்கும் வாரிசு படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன் துணிவு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் என தகவல் பரவியது. 






எப்போதும் தன் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜித் பற்றிய இந்த செய்தி வைரலானது அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அஜித் சொன்னதாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “ஒரு நல்ல படத்திற்கு அந்த படமே பெரிய விளம்பரம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில்  துணிவு படத்திற்கு பின் அஜித் சமூக வலைத்தளத்தில் இணையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


பொதுவாகவே அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், பைக் பயணம் செல்லும் புகைப்படங்கள் எல்லாம் வேறு யாராவது தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதன் மூலம் அவர் குறித்த நிகழ்வுகள் வெளியே தெரிய வரும். இதற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு உள்ள நிலையில் இது உண்மையானால் சமூக வலைத்தளங்கள் களைகட்டும். சூப்பர் ஸ்டார் தொடங்கி அறிமுகமாகும் புதிய பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நிலையில் அஜித் மட்டும் இன்றளவும் ஏன் அதில் சேரவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.