நெல்லை மாவட்டம் சேரன் மாதேவி பகுதியை சேர்ந்தவர் 29 வயதான முகமது உசேன். இவருடைய மனைவி 26 வயதான ரெஜினா பானு. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். முகமது உசேன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்துக்கு வேலைக்காக வந்தார். நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் உசைன் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். 


இந்தநிலையில், சம்பவத்தன்று ரெஜினா பானு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்சில் சிகிச்சைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரெஜினா பானு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 


இதையடுத்து ரெஜினா பானு இறந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது உசேனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரெஜினா பானு இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றதாகவும், மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார். போலீசாரின் குறுக்குவிசாரணையின் போது முகமது உசேன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் காவல்துறையினர் சந்தேகத்தில் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 


இந்த சூழலில் ரெஜினா பானுவின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து முகமது உசேனிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், குடும்ப தகராறு காரணமாக ரெஜினா பானுவை முகமது உசேன் கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் முகமது உசேனை கைது செய்தனர்.


மேலும் உசைன் இதுகுறித்து அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், ”எனக்கும், ரெஜினா பானுவுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கும், எனது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று நான் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த போது எனக்கும், மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மனைவி ரெஜினா பானு தற்கொலை செய்யப்போவதாக கூறி கழுத்தில் துணியை மாட்டிக்கொண்டு மிரட்டினார். அப்போது நான் அவரை சமாதானம் செய்தேன்.


அதன்பிறகும் சமாதானம் அடையாததால், ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நானே நெரித்தேன். அப்போது அவர் இறந்து விட்டார். உடனே அவரை தூங்குவதுபோல் படுக்கையில் படுக்க வைத்து விட்டு, அருகில் உள்ள அறைக்கு சென்று படுத்து தூங்கினேன். மறுநாள் காலையில் குழந்தைகளும் கண் விழித்தனர். அப்போது தாயார் எழும்பாததால் என்னிடம் கேட்டபோது, அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக நாடகமாடினேன். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ரெஜினாபானுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.


அங்கு எனது மனைவி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும் காவல்துறையினர் என்னை பிடித்து விசாரணை நடத்திய போது உண்மையை ஒப்புக் கொண்டேன்.” இவ்வாறு வாக்குமூலத்தில் முகமது உசேன் கூறியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டார்.