பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை  ஐஸ்வர்யா ராய் கணவர் மற்றும் நடிகர் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுக்க தயங்காதவர் நடிகர் அபிஷேக் பச்சன். அந்த வகையில் அவரின் அடுத்த  படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 


 



பார்த்திபன் படத்தின் இந்தி வர்ஷன் :


அந்த வகையில் தமிழில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களையும் விருதுகளையும் பெற்ற நடிகர் பார்த்திபனின் 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் அபிஷேக் பச்சன். ஒரே நபர் மட்டுமே நடித்த இப்படம் பார்த்திபனின் புதிய முயற்சிகளில் ஒன்றாகும். வழக்கமான கதையாக இல்லாமல் திரையில் ஒருவர் மட்டுமே தோன்றிய இப்படம் பாராட்டை குவித்தது. அதன் இந்தி ரீ மேக்கில் அபிஷேக் பச்சனும் சிறப்பாக நடித்துள்ளார் எனும் தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயமாக தமிழ் சினிமாவை போலவே பாலிவுட்டிலும் இப்படம் வெற்றிப்படமாக அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.  


 






 


மீண்டும் தமிழ் ரீமேக்கில் அபிஷேக் பச்சன்:


சமீபத்தில் தான் தமிழ் ரீமேக் படத்தில் நடித்து முடித்துள்ள அபிஷேக் பச்சன் அடுத்ததாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள திரைப்படமும் ஒரு தமிழ் ரீமேக் திரைப்படம் தான் எனும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குனர் மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில் நகைச்சுவை படமாக வெளியான 'கே டி அல்லது கருப்புதுரை' படத்தின் இந்தி ரீமேக்கில் தான் அபிஷேக் பச்சன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அபிஷேக் பச்சனுக்கு படத்தின் கதை மிகவும் பிடித்துப்போகவே அவரின் சம்மதம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் இப்படத்தில் அபிஷேக் பச்சன் 71 வயது முதியவராக நடிக்க உள்ளார் என்பது தான். 



மாற்றம் செய்யப்படும் திரைக்கதை :


'கே டி அல்லது கருப்புதுரை' படம் ஒரு 71 வயது முதியவருக்கும் 8 வயது சிறுவனுக்கும் இடையில் ஏற்படும் பாச பிணைப்பை மிகவும் அழகாக வெளிப்படுத்தப்பட்டு இருக்கும். அதில் முதியவராக மு. ராமசாமியும் சிறுவனாக நாகா விஷாலும் நடித்திருந்தனர். அதன் இந்தி ரீ மேக்கில் முதியவராக அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். தமிழில் இயக்கிய இயக்குனர் மதுமிதா சுந்தரராமனே இந்தி படத்தையும் இயக்க உள்ளார். இந்தி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் திரைக்கதை சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனும் தகவலும் வெளியாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு திரையில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.