பான் இந்தியா ட்ரெண்ட் பற்றி நடிகர் அமீர்கானிடம் கேட்கப்பட்டது. அது குறித்து அவர் அளித்த பதிலை இங்கு பார்க்கலாம்.


லால் சிங் சத்தா படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. அதில் பாலிவுட்  முன்னணி நடிகரான அமீர்கான், நாகசைதன்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது அமீர்கானிடம் பான் இந்தியா ட்ரெண்ட் பற்றி கேட்கப்பட்டது.


 






அதற்கு பதிலளித்த அமீர்கான்,  “ இந்தியா அழகான நாடு. பன்முகத்தன்மை கொண்டது. நமக்கு வெவ்வேறு மொழிகளில் திரை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள். ஒரு மொழியில் கலைஞர் ஒருவரால் எடுக்கப்படும் படைப்பு, பிற மொழி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு அழகான விஷயம். அது மீண்டும் மீண்டும் அதிகமாக நடக்க வேண்டும். அப்படி நடப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.” என்று பேசினார். 


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது. அமீர் கான்,  கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.


இந்தப்படத்தில் நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். 


சர்ச்சையான பேட்டி


முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில்  ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார். அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது.


அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற  ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இந்த நிலையில் அது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. 


இதற்கு பதிலளித்த நடிகர் அமீர்கான், “ இது போன்ற  பாய்காட் பாலிவுட்.. பாய்காட் அமீர்கான்.. பாய்காட் லால் சிங் சத்தா ஹேஷ்டேக்குகள் எனக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. காரணம், ஏராளமானோரின் இதயங்கள் எனக்கு இந்தியா பிடிக்காது என்று நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையில்லை.


நாட்டை நேசிக்கிறேன்


நான் உண்மையில் இந்த நாட்டை நேசிக்கிறேன். நான் அப்படித்தான். சிலர் அப்படி உணர்ந்தால் அது துர்திஷ்டவசமானது. மேலும் தனது ரசிகர்களிடமும், பார்வையாளர்களையும் கேட்டுக்கொண்ட அமீர்கான், “ ஆனால் அது அப்படி இல்லை என்றும் தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள் என்றும் தயவு செய்து என் படங்களை பாருங்கள்” என்று பேசினார்.