‘லால் சிங் சத்தா’ திரைப்படத்தில் இந்திய ராணுவத்தின் மனஉறுதியை குலைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, “ வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் லால் சிங் சத்தா திரைப்படத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் வகையிலான கருத்து இடம் பெற்றுள்ளதாக புகார் கூறியுள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் படக்குழுவின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் அவர் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.  




அவர் அளித்துள்ள புகாரில், “  லால் சிங் சத்தா திரைப்படத்தில் மனநலம் குன்றிய ஒரு நபர் கார்கில் போரில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. கார்கில் போரை எதிர்த்துப் போராட சிறந்த ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர் என்பதும், கடுமையான பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் லால் சிங் சத்தா படக்குழுவினர் இந்திய ராணுவத்தின் மன உறுதியை குலைப்பதற்கும், அவதூறு விளைவிப்பதற்கும், வேண்டுமென்றே இப்படியான சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றனர். இப்படத்தில் அமீர் ராணுவ அதிகாரியாக பல தொழில்களில் நடித்துள்ளார்.” என்று குற்றம் சாட்டி இருக்கிறார். 


ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் டாம் ஹாங்ஸ் நடித்து பல விருதுகளைக் குவித்த ஃபாரஸ்ட் கம்ப் எனும் பிரபல திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக லால் சிங் சத்தா படம் உருவாகி உள்ளது. அமீர் கான், கரீனா கபூர் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது. 


 






இந்தப்படத்தில் நடிகர் நாகசைதன்யா இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் அமிர்கான் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். 


சர்ச்சையான பேட்டி 


முன்னதாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அமீர்கான் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்றும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டை விட்டு வெளியேறி விடலாமா என்று அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் தன்னிடம் கேட்டதாகவும் பேசினார். அவரது இந்தப்பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பி, ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை பெற்றது. அவர் பேசிய அந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லால் சிங் சத்தா படத்தை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அண்மையில் ட்விட்டரில் பாய்காட் லால் சிங் சத்தா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.


 Boycott லால் சிங் சத்தா ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது குறித்து அமீர்கானிடம் கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “ நான் யாரையாவது, எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அவர்களுக்கு எனது வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன். நான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. யாராவது இந்தப்படத்தை பார்க்க விரும்பவில்லை என்றால் அவரது உணர்வை நான் மதிக்கிறேன். பாய்காட் லால் சிங் சத்தா படத்தை ட்ரோல் செய்யும் விஷயத்தை பொருத்தவரை அதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. நான் என்னுடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய ரசிகர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று பேசியிருந்தார்.