புகழ்பெற்ற இஸ்ரோ விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் “ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்”. நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவும்,இந்தியில் ஷாருக்கானும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளனர். ஏற்கெனவே ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவும், மாதவனும் சேர்ந்து நடித்துள்ளனர். அதற்குப்பின்னும் தொடரும் அவர்களின் நட்பே இந்த படத்தில் நடிகர் சூர்யாவை நடிக்கவைத்துள்ளது.


இந்நிலையில் நடிகர் மாதவனும், சூர்யாவும் வீடியோகாலில் நேருக்கு நேராக பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் மாதவன் பல்வேறு விஷயங்களை சூர்யாவிடம் பகிர்ந்துகொண்டார். அதில்,  ஹலோ சூரியா, உங்களுக்கு தெரியாத ஒரு சீக்ரெட்டை நான் இப்போது எல்லாரு முன்னாடியும் சொல்றேன்.நீங்க நேருக்கு நேர் பண்ணும்போது உங்களுக்கெல்லாம் நான் அட்வைஸ் செஞ்சேன். அதற்கு பிறகு மணிரத்னம் சாரோட அலைபாயுதே படம் பண்ணேன். நாமும் நிறைய பழக ஆரமிச்சோம். அப்போது எல்லா படமும் எனக்கு ஓடிட்டே இருந்துச்சு. 






அதனால நான் ஜாலி ஆகிட்டேன். ரன், அன்பே சிவம்னு அடுத்தடுத்த படம். ஒரு படத்துல பேரு கிடைச்சது, இன்னொரு இடத்துல புகழ் கிடைச்சது. ரொம்பவும் சந்தோஷமா இருந்தேன். பின்னர் கஜினினு ஒரு படம் எனக்கு ஆபர் வந்துச்சு. ஆனா படத்தோட செகண்ட் ஆப் எனக்கு பிடிக்கல. அதனால நான் அந்த படத்த ஒத்துக்கல. அது சுத்திவளைச்சு கடைசில உங்க கையில வந்துடுச்சு. நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். காக்க காக்க படமெல்லாம் பார்த்தேன். சரியான ஆளுகிட்ட படம் போனதாக நினைத்தேன். கஜினி படம் வெற்றி ஒருபக்கம், அந்த படத்துக்காக நீங்கள் செஞ்ச மெனக்கெடல் என்னை ஆச்சரியமாக்கியது. அந்த சிக்ஸ் பேக், கடின உழைப்பு எல்லாம் எனக்கு ஷாக். நான் செஞ்சிட்டு இருந்த வேலை மீதே எனக்கு அருவெறுப்பு வந்துட்டு. மேடி நீ, ஜாலியா போய்ட்டு இருக்க, சூர்யாவெல்லாம் இப்படி ஹார்டு வொர்க் பண்றாரு பாருனு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். 


தத்தி மாதிரி படம் பண்றதா நினைச்சுகிட்டு நானே என்னை சரி பண்ணிக்கிட்டேன். உங்களுக்கே தெரியும் எனக்கு பெரிய பிரண்ட்ஸ் சர்க்கிள் கிடையாது. நல்ல பிரண்டுனா எப்படினு உங்கள பாத்துதான் கத்துகிட்டேன்”  என்றார்.