செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், நேற்று அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த பயணி ஒருவரை, நள்ளிரவில் தனது தோளில் தூக்கி வந்த காவலருக்கு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நன்றியை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் கந்தன் வயது (19) . இவர் சென்னையில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு இரவு தாம்பரத்திலிருந்து, நெல்லைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியில் பயணம் செய்துள்ளார். முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் கந்தன் பயணம் செய்துள்ளார். 



 

எனவே கந்தன் ஆபத்தான முறையில் கதவின் அருகே அமர்ந்து வந்ததாக  தெரிகிறது. தொடர்வண்டி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் அருகே வந்த பொழுது, நள்ளிரவு பத்து மணி அளவில் எதிர்பாராத விதமாக கந்தனின் கால் பிளாட்பாரம் ஒன்றில் மோதி உள்ளது. வலியால் துடித்த கந்தன் தொடர் வண்டியில் கத்தியுள்ளார். இதனை அடுத்து அடுத்து நிறுத்தமான செங்கல்பட்டில் தொடர் வண்டி நின்றுள்ளது. 



 

அடிப்பட்ட கந்தன், செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு வருவதற்குள் ரத்தம் அதிகம் வெளியேறி சுயநினைவு இன்றி இருந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்த பயணிகள் கூச்சலிட்டு, காவலர் மற்றும் தொடர்வண்டி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் பணியில் இருந்த காவலர் தயாநிதி என்பவர் உடனடியாக, மயங்கி விழுந்திருந்த கந்தனை சற்றும் யோசிக்காமல் தோளில் தூக்கிக்கொண்டு உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து விட்டு, ஆறாவது நடைமேடையில் இருந்து தொடர்வண்டி நிலையம் நுழைவு வாயில் வரை தூக்கி வந்துள்ளார்.  காவலரின் துரித நடவடிக்கையால் உடனடியாக மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவலரின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.



 

இதுகுறித்து காவலர் செல்வராஜை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நெல்லை எக்ஸ்பிரஸில் வந்த பயணி ஒருவர் மயங்கி விழுந்து இருந்தால் அவருக்கு காலில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது. உடனடியாக இதுகுறித்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆறாவது பிளாட்பார்மில் தொடர்வண்டி நின்று இருந்ததால், மயங்கி விழுந்த இளைஞரை தூக்கி கொண்டு வேகமாக ஓடிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றி இளைஞரை காப்பாற்றினோம் என தெரிவித்தார்.