12th ஃபெயில்


கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸ்ஸே, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.


ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம்  பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் மனோஜ் குமாராக நடித்த விக்ராந்த் மாஸ்ஸே இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.


கட் சொன்னபிறகும் அழுகையை நிறுத்தமுடியாது






Death In The Gunj, Lootera உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸ்ஸே. தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வரும் விக்ராந்த், முன்னதாக நடித்த டெத் இன் தி கஞ்ச் படத்தில்  கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து மீளமுடியாமல் வளர்ந்த ஒரு மனிதனின் உளவியலை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபின் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதனை சரிசெய்ய தான் மனநல ஆலோசனை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


சமீபத்தில் வெளியாகிய 12th ஃபெயில் படத்தைப் பொறுத்தவரை ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஒருவர் படித்து ஐ,ஏ எஸ் அதிகாரி ஆவதன் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிவசமான  நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் தான் அழும் காட்சிகளில் நடித்துகொண்டிருந்தபோது டைரக்டர் கட் சொன்ன பிறகும் தன்னால் அழுகையை நிறுத்த முடியாமல் அழுகொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


விக்ராந்தை பாராட்டிய கங்கனா ரனாவத்


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விக்ராந்த் மற்றும் கங்கனா ரனாவத் இருவருக்கும் இடையில் நடந்த கருத்து மோதல் காரணமாக விக்ராந்தை கங்கனா கரப்பான்பூச்சி என்று திட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து 12th ஃபெயில் படத்தைப் பார்த்த கங்கனா ரனாவத் விக்ராந்தின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமில்லாமல், அவர் பார்க்க நடிகர் இர்ஃபான் கான் மாதிரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தி சினிமாவில் இர்ஃபான் கான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை விக்ராந்த் நிரப்புவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.