பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக தஞ்சை வடக்குமாவட்ட செயலாளரும், தஞ்சை வடக்கு ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவருமான ம.க.ஸ்டாலினை பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ளது.


வேட்பாளர் விபரம்:
பெயர் : ம.க.ஸ்டாலின்
பொருப்பு : பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் 
பிறந்த தேதி : 22.07.1970
வயது : 53
தகப்பனார் பெயர் : ஆ.கலியபெருமாள் 
தாயார் பெயர்: க.சரோஜா
மனைவி பெயர் : செந்தமிழ் செல்வி ஸ்டாலின் 
மகன் மகள்கள் விவரம் : 2மகள் + 1மகன்
சகோதரர்கள் : 3 பேர் 
1.ம.க.கல்யாணசுந்தரம் - விவசாயி
2.ம.க.பாலதண்டாயுதம் - கவுன்சிலர் ஆடுதுறை பேரூராட்சி 
3.ம.க.ராஜா, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் 


வகித்த பதவிகள்


கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆடுதுறை பேரூராட்சி 13 -வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று பேரூராட்சி பெருந்தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். 


அரசியல் வாழ்க்கை தொடக்கம் :


கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னாள் குடந்தை வட்டாரக்குழு செயலாளராகவும், மக்களுக்கான போராட்டங்களில் பங்கேற்று பெரும்பங்கு வகித்த மறைந்த மருத்துவக்குடி ஆ.கலிய பெருமாளின் மகனான ம.க.ஸ்டாலின் சிறுவயதிலிருந்தே பள்ளி காலம் முதலே பாட்டாளி மக்கள் கட்சியின் மீதும் பாமக நிறுவனர் ராமதாஸ் மீதும் கொண்ட பற்றின் காரணமாக 1988 -ஆம் ஆண்டு குடந்தை அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் பாமக மாணவர் சங்க தலைவராக பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கி, தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கங்களில் ஒன்றியச் செயலாளர் முதல் மாவட்டம் மற்றும் மாநில பொருப்புகளில் பதவி வகித்தவர். தற்போது தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளராக பதவி வகிக்கிறார்.




பேரூராட்சி பெருந்தலைவராக பொறுப்பேற்று செய்த சாதனைகளில் சில.


மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் மண்ணின் மைந்தன் கோசிமணியின் நினைவாக நூலகம், உடற்பயிற்சி அரங்கத்துடன் கூடிய கோசிமணி மணிமண்டபம் அமைக்கும் பணி. பேரூராட்சி பெருந்தலைவராக ஆடுதுறை பேரூராட்சியை பொறுப்பேற்று சுத்தமான, சுகாதாரமான பகுதியாக மாற்றியது. 25 ஆண்டுக்கு மேலாக ஆடுதுறை வளம் மீட்பு பூங்காவில் மலைபோல் தேங்கியிருந்த குப்பை கழிவுகளை நவீன எந்திரங்கள் கொண்டு முற்றிலும் அப்புறப்படுத்தியது. நவீன வசதிகளுடன் வாணிப கட்டிடங்களுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் . புதிய பேருந்து நிலைய கட்டிட பணிகளால் மக்கள் பாதிப்படையாமல் இருக்க குடீநீர், கழிவறை வசதியுடன் தற்காலிக பேருந்து நிலையம். ஆடுதுறை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் அனைத்து வசதிகளுடன் கூடிய பூங்காக்கள். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி தொகுதி நிதியில் பிரம்மாண்ட இறகுப் பந்தாட்ட உள்விளையாட்டு அரங்கம். மகளிர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஆடுதுறையில் அனைத்து மகளிர் காவல் நிலையம். பொதுமக்கள், வணிகர்கள், பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு நலன் கருதி ஆடுதுறை பேரூராட்சி அனைத்து பகுதிகளிலும் 60 -க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணி.


ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் குளங்கள்  தூர்வாரப்பட்டு  நடைபாதையுடன் அழகுற பராமரித்தல் பணிகள். ஆடுதுறை பேரூராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட நவீன எரிவாயு தகன மேடை. ஆடுதுறை பேரூராட்சி பகுதிகளில் கோடைக்காலங்களில் பொதுமக்களின் நலன் கருதி மினி டேங்க் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள். ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடுகாடு, சுடுகாடு களை பராமரித்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல். ஆடுதுறை ரயில்நிலையம், தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல தரமான தார்சாலை அமைக்கும் பணி. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாரு சாதி, மத, பேதமின்றி  தனது சொந்த செலவில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் இறுச்சடங்கிற்காக 5 ஆயிரம் ரூபாய் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவிக்கும் வழக்கத்தை இன்றுவரை மேற்கொண்டுள்ளார். இதே போன்று ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகளுக்கு மணமக்களுக்கு பட்டாடைகளுடன் பழம், மலர் மற்றும் 1001 ரூபாய் ரொக்கமாகவும் நேரில் வழங்கி  இன்றுவரை வாழ்த்தி வருகிறார். சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் பிரம்மாண்டமான முறையில் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செய்தல், ஆடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மரியாதை செய்தல் பணிகள்‌ தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தஞ்சை ராமகிருஷ்ண மடத்துடன் இணைந்து இறகுப் பந்து மற்றும் கைப்பந்தாட்ட போட்டிகளுடன் விவேகானந்தர் விளையாட்டு திருவிழா. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆடுதுறை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மகளிர்களுக்கான மாபெரும் விளையாட்டு கலைத்திருவிழா.


கட்சி பணிகள்


தஞ்சை மாவட்ட பாட்டாளி மாணவர் சங்க மாநாடு குடந்தை மூர்த்தி கலையரங்கில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டது. ஆடுதுறையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், பழனிபாபா முன்னிலையில் தஞ்சை மாவட்ட பாமக சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. மருத்துவர் ராமதாஸின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு 90-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, பாத்திரங்கள் உட்பட பல சீர்வரிசை பொருட்களுடன் ஒரே அரங்கில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில்  பிரம்மாண்ட திருமணம் நடத்தியுள்ளார். தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சிறப்புக் கூட்டங்கள் நடத்தி புதிய நிர்வாகிகளை செயல்பட வைத்தார்.


போராட்டங்கள் : 


வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டி தஞ்சை டெல்டா பகுதிகளில் பல கட்டங்களாக இவரது தலைமையில் போராட்டங்களும், விவசாயிகள் சார்ந்த போராட்டம், காவிரி பிரச்சினைக்கான போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள், மகளிர் நலனுக்கான போராட்டம், நெசவாளர் நலனுக்கான போராட்டம், காவிரி டெல்டா பகுதியை  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரியும், கதிராமங்கலம் மக்களின்   ஓ.என்.ஜி.சிக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்டன் இணைந்து மக்கள் போராட்டம், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி ஐந்தாண்டுக்கு மேலாக இவரது தலைமையில் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம், உண்ணாவிரத போராட்டம், மனித சங்கிலி போராட்டம், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் தமிழக தலைநகரான சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நூதண போராட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. தஞ்சை டெல்டா பகுதிகளில் கஞ்சா போதைப்பொருட்களை கட்டுப்படுத்தக்கோரி கதிராமங்கலத்தில் போராட்டம், என பாமக நிறுவனர் அறிவித்த கட்சி சார்ந்த போராட்டம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் நலன் சார்ந்த பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.