விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று பாமக வேட்பாளர் சி. அன்புமணியை விட 67757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. இடைத்தேர்தலில் 82.47 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் பனையபுரம் அரசு மேல் நிலைபள்ளியிலுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இன்று எண்ணப்பட்டன.


விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி. அன்புமணி மற்றும் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவை விட கூடுதலான வாக்குகள் பெற்று வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றுக்கும் அதிகமாக பெற்றிருந்தார். இடைத்தேர்தலில் 1,95,374 வாக்குகள் பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் 798 பதிவாகியிருந்தன. தபால் வாக்குகள் உட்பட இடைதேர்தலில் மொத்தமாக 1 லட்சத்து 96 ஆயிரத்து 269 வாக்குகள் பதிவாகின.


இதில் திமுக வேட்பாள்ர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளும் பாமக வேட்பாளர் சி அன்புமணி 56,296 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் பாமக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். இடைத்தேர்தலில் 859 வாக்குகள் நோட்டாவிற்கும் பதிவாகி இருந்தன.