விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... இன்று மாலை 6 மணியுடன் முடிகிறது பிரச்சாரம்

தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்ட வெளி நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எவருக்கும் தேர்தல் நடத்தை விதிகளின்படி தொகுதியில் தங்கிட அனுமதி இல்லை.

Continues below advertisement

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து இத்தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியது. இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

Continues below advertisement

மும்முனைப் போட்டி

இதையடுத்து கடந்த மாதம் 14ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 24ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 64 வேட்புமனுக்களில் 35 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டது. 29 வேட்பாளர்கள் களத்தில் இருப்பினும், இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினரிடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.

இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் சுற்றறிக்கையில்..

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் 10.07.2024 நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 08.07.2024 அன்று மாலை 06.00 மணியுடன் தேர்தல் வாக்கு சேகரிப்பு, பிரச்சாரம் நிறைவடைவதால், அன்று மாலை 06.00 மணிக்குமேல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எவரும் வாக்கு சேகரிப்பு மற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என்றும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் வீடுகளில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்ட வெளி நபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் எவருக்கும் தேர்தல் நடத்தை விதிகளின்படி தொகுதியில் தங்கிட அனுமதி இல்லை. மீறி தங்கும் பட்சத்தில் தேர்தல் ஆணைய விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola