அமமுக கூட்டணியிலிருந்து விருத்தாசலம் தொகுதியில் தேர்தல் களமிறங்கிய தேமுதிகவின் பிரேமலதா இதுவரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அந்த தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 3331 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் கார்த்திகேயன் 1658வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாவது இடத்திலேயே பிரேமலதா விஜயகாந்த் உள்ளார். அவர் இதுவரை 1331 வாக்குகள் பெற்றுள்ளார்




முன்னதாக, விருத்தாசலம் தொகுதியை பொருத்தவரை தேமுதிக பலமாக இருந்த இடம். 2005ம் ஆண்டு கட்சித் தொடங்கிய விஜயகாந்த் 2006 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டும்  விருத்தாசலம் தொகுதியை தேமுதிக கைப்பற்றியது. தேமுதிகவின் முத்துக்குமாரை களமிறக்கி அவரை வெற்றிபெறச் செய்தார் விஜயகாந்த். 2016ல் அந்த தொகுதியை அதிமுக கைப்பற்றியது. இந்நிலையில் மீண்டும் விருத்தாசலம் தொகுதியை கைப்பற்றும் முயற்சியில் பிரேமலதா களம் இறங்கினார்


தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று  காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்த மாநிலங்களில் பதிவாகிய வாக்குகள் காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவில் அதிகரித்து வருவதால் இந்த முறை  கொரோனா தடுப்பு நடைமுறைகள் வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 97 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.