தஞ்சாவூர்: இப்போதே திரும்பும் இடமெல்லாம் கட்சி போஸ்டர்கள்தான். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இன்னும் தேர்தல் களத்தில் அனல் காற்று வீசும். அதில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் இப்போதே உஷ்ண காற்று வீச ஆரம்பித்து விட்டது. இந்த எம்.பி., தொகுதி மகளிருக்கு ஒதுக்கப்படும் என்று காற்றுவாக்கில் செய்தி தீயாக பரவி வருகிறது.


தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, மன்னார்குடி, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி என 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தஞ்சாவூர் எம்.பி. தொகுதி. 1952ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இந்த தொகுதியில் 19 முறை தேர்தல் நடந்துள்ளது. இதில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் ஆளுமை செலுத்தியது. இந்த தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் கட்சியும், இரண்டு முறை அ.தி.மு.க.,வும், எட்டு முறை தி.மு.க.,வும் வெற்றி பெற்றுள்ளன.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பிடித்தாலும் தஞ்சாவூர் எம்.பி. தொகுதியை அவர்களால் பெற முடியவில்லை. அந்தளவிற்கு தஞ்சையை கோட்டையாக திமுகவினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட பழனி மாணிக்கம், ஆறு முறை வெற்றி பெற்று எம்.பி.,யானார். இந்நிலையில் வரும் தேர்தலில், தஞ்சாவூர் தொகுதி பெண்களுக்கு தான் என்ற தகவல் காட்டுத்தீயாக பரவி வருகிறது.  இந்த செய்தியை அறிந்த மன்னார்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியான ராதிகா, தேர்தல் செலவை தான் ஏற்றுக்கொள்ளுவதாக கூறி விருப்ப மனு கொடுத்துள்ளாராம்.


நானும் போட்டியில் இருக்கிறேன் என்பதும் போல் தஞ்சாவூர் துணை மேயர் அஞ்சுகம், சிட்டிங் எம்.பி., பழனிமாணிக்கம், திருவோணம் முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி என பலரும் வேட்பாளராகத் துடிக்கின்றனர். இதற்கிடையில் தற்போது எம்.பி.,யாக இருக்கும் பழனிமாணிக்கம் கட்சி நிர்வாகிகளை அனுசரிப்பதில்லை என்றாலும், தேர்தல் சமயத்தில் தன் மீதுள்ள அதிருப்திகளை சரி செய்து கம்பீரமாக தேர்தலை எதிர்கொள்வார் என கட்சியினர் கூறத் துவங்கி உள்ளனர். அதுபோல்தான் அவரும் கடந்த சில மாதங்களாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னுடைய வழக்கமான பாணி பேச்சால் தொண்டர்களை ஈர்த்து வருகிறார். 


தேர்தலில் செலவு செய்வதற்கு பழனிமாணிக்கத்தை விட்டால் கட்சியில் வேறு ஆளில்லை. இம்முறை பா.ஜ.,வை வென்று விட வேண்டும் என கட்சி தலைமையும் உறுதியாக இருப்பதால், பழனிமாணிக்கத்திற்கு மீண்டும் போட்டியிட 10வது முறையாக வாய்ப்பளிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதற்கிடையில் மேலிடத்தில் யாரை பார்க்கணுமோ அவர்களை பார்த்து சீட்டை கன்பார்ம் செய்து விட்டாராம் சிட்டிங் எம்.பி., பழனிமாணிக்கம். அதனால் உற்சாகமாக தேர்தல் வேலைக்கு தன்னுடைய ஆதரவாளரை களம் இறக்கி விட்டுள்ளார். அதை உறுதி செய்யும் வகையில், இதுவரை தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல் இருந்த அவர், தற்போது கட்சி நிகழ்ச்சி முதல் அரசு நிகழ்ச்சி வரை ஒன்றையும் விட்டு வைக்காமல் ஆஜராகி விடுகிறார் என்று அவரது கட்சியினரே தெரிவிக்கின்றனர்.


தி.மு.க.,வில் ஒருமுறை எம்.பி., - எம்.எல்.ஏ., ஆனவர்களுக்கு தொடர்ந்து பலமுறை அந்தப் பதவிகளுக்காக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருவது கட்சி அடிமட்ட தொண்டர்கள் மற்றும் கட்சிக்காக எதையும் எதிர்பார்க்காமல் உழைக்கும் நிர்வாகிகள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அது இந்த தேர்தலிலும் நடக்கும் என்பதுதான் உண்மைதான் என்கின்றனர் தொண்டர்கள். மகளிருக்கு தஞ்சை எம்.பி., தொகுதி ஒதுக்கப்பட்டால் புதியவர் வருவாரா என்று மக்களும், பல கட்சி தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர்.