AIADMK Candidate List 2026: அதிமுக சார்பில் சென்னையில் வேட்பாளர்களாக களமிறங்க உள்ள நபர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிமுக - 3ம் கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை உள்ளிட்ட 17 தொகுதிகளில் வேட்பாளர்களாக களமிறங்க உள்ள நபர்களின் விவரங்களை உள்ளடக்கிய, 3ம் கட்ட பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி
- ஆயிரம் விளக்கு - வளர்மதி
- அண்ணா நகர் - கோகுல இந்திரா
- சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம்
- துறைமுகம் - ராயபுரம் மனோ
- விருகம்பாக்கம் - விருகை வி.என். ரவி
- தியாகராய நகர் - தி. நகர் சத்தியா
- வேளச்சேரி - அசோக்
- ஆர்.கே. நகர் - ராஜேஷ்
- வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்
- கொளத்தூர் - சந்தான கிருஷ்ணன்
- திரு. வி. நகர் - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
- எழும்பூர் - அபிஷேக் ரங்கசாமி
- திட்டக்குடி - முருகுமாறன்
- திருச்சுழி - எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்
- ஆலந்தூர் - எஸ். சரவணன்
- ஆலங்குடி - தன. விமல்
என இறுதிகட்ட வேட்பாளர்கள் பட்டியலில் 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் பட்டியல் ஓவர்..
வேட்புமனுதாக்கல் தொடங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக 23 வேட்பாளர்கள் பெயரை இந்த வார தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதனை தொடர்ந்து 127 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 150 பேரில் 46 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு இருந்த நிலையில், 17 பெண் வேட்பாளர்களுக்கும்வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதேநேரம், ஒரே ஒரு இஸ்லாமியர் மட்டுமே வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று இருந்தார். இந்நிலையில் கடைசியாக மீதமிருந்த சென்னை மாவட்டத்தின் 12 தொகுதிகள் உட்பட 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அதிமுக அறிவித்துள்ளது.
திரு.வி. நகர் சர்ப்ரைஸ்
ஏற்கனவே வெளியாகியிருந்த தகவல்களின்படி, திரு.வி.க. நகரில் பொற்கொடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2024ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே பொற்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே திரு.வி.க. நகரில் களமிறங்க உள்ளார். இதன் மூலம், கடந்த முறை சென்னையில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை என்ற மோசமான நிலையை மாற்ற அதிமுக முகுந்த ஆர்வம் காட்டுவதை காண முடிகிறது. முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில், அதிமுக புரட்சித் தலைவி பேரவைத் துணைச் செயலாளரான பி. சந்தானகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதேநேரம், துணை முதலமைச்சரான உதயநிதியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் ஆதிராஜா ராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் கனவு ஓவர்..
இதனிடையே, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் மாற்றம் செய்து தியாகராய நகர் மற்றும் ஆலங்குடி தொகுதிகளை தங்களுக்கு வழங்க வேண்டுமென பாஜக தரப்பில் அதிமுகவிடம் வலியுறுத்தப்பட்டதாம். இந்த நிலையில், மேற்குறிப்பிடப்பட்ட 2 தொகுதிகளுக்கும் எடப்பாடி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதனால் பாஜகவின் வினோஜ் பி. செல்வம் போன்றோர் அதிருப்தியில் உள்ளனராம்.
