ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency)


தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகவும் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 


ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.


வேட்பாளர்கள் யார் ?


திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி. ஆர். பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரவிச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


 




வாக்காளர்களின் எண்ணிக்கை 


 


ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை --- 23,58,526


ஆண் வாக்காளர்கள் --11,69,344


பெண் வாக்காளர்கள் --- 11,88,754


மூன்றாம் பாலின வாக்காளர்கள் --- 428


 


பாஜக கூட்டணி வேட்பாளர் வேணுகோபால்


முதலில் இந்த தொகுதியை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் பாஜக அல்லது பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. உத்தேசப்பட்டில்கள் வெளியான பொழுது கூட, தொகுதியில் பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , இறுதிக்கட்டத்தில் பாஜக போட்டியிடும் என தகவல்கள் வந்தது. இறுதி நேரத்தில் , ஸ்ரீபெரும்புதூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை பொருத்தவரை தமிழ் மாநில கட்சிக்கு பெரிய அளவில் அமைப்புகள் இல்லை. முழுமையாக இந்த தொகுதியை பொருத்தவரை கூட்டமைக் கட்சிகளை நம்பிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது பணியை துவங்கி இருந்தது. வடதமிழ்நாடு என்பதால் பாமகவின் செல்வாக்கும் , கட்சி கட்டமைப்பும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு உதவி செய்தது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதி மற்றும் நகர் பகுதிகள் அதிகம் கொண்ட தொகுதி என்பதால் பாஜகவிற்கும் பல்வேறு இடங்களில் ஆதரவும் கட்சி கட்டமைப்பும் உள்ளது.‌


 




ஆனால் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்துக்கு உட்பட்ட பகுதியில் பாஜகவின் மாவட்ட நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால், ஆரம்பம் முதலே வேட்பாளர் வாக்கு சேகரிக்க செல்லும்பொழுது, திணறி வந்ததாக கூறப்படுகிறது.‌ இறுதி நேரத்தில் கூட ஒத்துழைப்பு கிடைக்காததால், வேட்பாளர் வேணுகோபால் அப்செட்டில் உள்ளாராம்.


கணக்கு போட்டு வேலை செய்த வேணுகோபால்


திமுக சார்பில் போட்டியிடும் டிஆர் பாலுவை எதிர்த்து, அதிமுக சார்பில் அவருக்கு சமமான வேட்பாளரை நிறுத்தாதது தனக்கு சாதகமாக இருக்கும் என வேணுகோபால் நம்பியுள்ளார். எனவே இரண்டாவது இடத்தை பிடித்து அதிக வாக்குகளை பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்திலேயே களத்தில் பணியாற்றி வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளினால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு அடையாளம் கிடைக்கும் என கணக்கு போடுகிறாராம்.




 


கூட்டணியில் என்ன பிரச்சனை 


இந்தநிலையில் கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், சரிவர ஒத்துழைப்பு கொடுக்காததால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத தமிழ் மாநில கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் கூறுகையில் , ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பாஜக மாவட்ட நிர்வாகியிடம் சுவர் விளம்பரங்களை மேற்கொள்ள, ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை முறையாக கிளைப் பகுதிகளுக்கு சென்று சேராததால், தங்களுக்கு ஆதரவு இருக்கும் பகுதியில் கூட சுவர் விளம்பரங்கள் எழுதப்படவில்லை. இதனால் சைக்கிள் சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் சுனக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி சென்று , சுவர் விளம்பரங்களை மேற்கொண்டுள்ளனர். வேட்பாளர் பிரச்சாரத்திற்கு செல்வதை விட , வீடுதோறும் சென்று நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பது தேர்தலில் வாக்குகளை பெற முக்கிய அம்சமாக உள்ளது. அவற்றையும் வெளியூர் நிர்வாகிகளை வைத்தும் , பிற கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வைத்து வீடு தோறும் பிரச்சாரத்தை மேற்கொண்டோம் என தனது ஆதங்கத்தை கொட்டினார்.


 




ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வேணுகோபால் குழப்பத்துடனே தேர்தலை எதிர்கொள்கிறார் என்பதில் மாற்று கருத்து இல்லை.