நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வார்டு மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் போட்டிகள் கடுமையாக உள்ளது. இதனால் அமைச்சர் பி.மூர்த்தி ஒருபகுதியிலும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.


 



 

இந்நிலையில் மதுரை மாநகராட்சி 57- வதுவார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் ’இந்திராணி பொன்வசந்த்’ அவர்களை ஆதரித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அங்குள்ள முனியாண்டி கோயிலில் வரவேற்பு மற்றும் வழிபாட்டிற்கு பிறகு அங்கு திரளாக கூடியிருந்த வாக்காளர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும் போது, ”எங்கெல்லாம் பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுகிறதோ அந்த சமூகம் முன்னேறிய சமூகமாக திகழும்.

 

அதன்படி கடந்த  அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற குழப்பான வார்டு மறுவரையறையில் திருப்தி இல்லாத போதும் கூட, மக்களின் அடிப்படை தேவைகளை மனதில் கொண்டு இந்த தேர்தலை தற்போது கட்டாயமாக நடத்தியே தீர வேண்டும், என்ற சூழலில் மதுரை மத்திய தொகுதியில் 16  வார்டுகளில் 13 பெண்கள் மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாசிச பி.ஜே.பிக்கு எதிராக வலிமையான குரல் எழுப்பிட நல்ல மக்களவை உறுப்பினரை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள். வாக்கிற்கு பணமே தராமல் இரண்டு முறை மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள்.



 

எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்த போதே தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அதிக அளவு திட்டப்பணிகளை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் என பெயர் பெற்றதோடு, திட்டமிடல், தொழிநுட்ப வசதி ஆகியவற்றை முழுமையாக பயன்படுத்தி முன்னுதாரணமாக செயல்பட்டேன். அதன் பயனாக இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்த போது மாண்புமிகு தமிழக முதல்வர் எனக்கு நிதி அமைச்சர் என்ற உயரிய பொறுப்பை அளித்ததோடு, திட்டமிடல், மனிதவள மேலாண்மை துறையை அளித்து சரிவடைந்து இருந்த தமிழகத்தின் பொருளாதார நிலையில் சீர்திருத்தத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் .அதற்கான நிதிகளை ஒதுக்கிடும் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன்.



 

மதுரையின் வளர்ச்சிக்காக இன்னும் பல்வேறு திட்டப்பணிகளை முதல்வரின் ஒப்புதலோடு செயல்படுத்திட உள்ளோம். ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குட முழுக்கு பணிக்காக 25 கோடி, ஒருங்கிணைத்த குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை நிறைவேற்ற 500 கோடி என முதல்வர் அறிவித்துள்ளார். அந்த பணிகளை எல்லாம் இன்னும் சிறப்பாக செயல்படுத்திட தி.மு.க  மற்றும் கூட்டணி காட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்தால் தான் இணைந்து மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிட இயலும் என்பதோடு மட்டுமல்லாமல் உங்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்திறன் கொண்ட மாமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

மாநில அளவில் மாவட்ட அளவில் நடைபெறும் நல்லாட்சி உங்களின் அருகிலும் உள்ளாட்சியிலும் தொடரவும், லஞ்சம், ஊழலில் திளைத்து கடந்த 10  ஆண்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சியை செயலற்ற நிலையில் வைத்து இருந்த அவலத்தை போக்கிட தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்” என பேசினார். மேலும் பிரச்சாரத்தின் போது  ”தேர்தலுக்கு பணம் வாங்கினால் அப்போதே முடிந்துவிடும். பணம் வாங்காமல் இருந்தால் எப்போதும் கேள்வி கேட்கலாம். பணம் வரும், போகும் ஆனால் தேர்தல் தான் முக்கியம்” என சினிமா நடிகர் எம்.ஆர்.ராதா பேசிய வசங்களை குறிப்பிட்டு அமைச்சர்  பேசியது கவனத்தை ஈர்த்தது.