தேர்தல் அலுவலகம் திறப்பு


மதுரை அ.தி.மு.க.,வின் மேற்கு தொகுதி பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் முன் பேசியபோது, "மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சரவணனுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமைதிப்படை திரைப்படம் சத்யராஜ் போல முன்னேறிவருகிறார். நாம் கூப்பிட்ட உடன் துள்ளி குதித்து ஓடி வருகிறார். மதுரை பாராளுமன்ற தொகுதி வாக்காளர்களிடம் டாக்டர் சரவணனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. காரணம் விடியல் தருகிறோம் என தி.மு.க., மக்களுக்கு சுமையை தந்துள்ளது. இதன் காரணமாக தி.மு.க., மீது உள்ள அதிருப்தியில் அ.திமுக வேட்பாளரை வரவேற்கின்றனர்.

செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு


 

இந்த முறை சிறுபான்மையினரின் வாக்கு அதிக அளவு அதிமுகவிற்கு கிடைக்கும். பி.ஜே.பி.,யுடன் கூட்டணியில் இல்லாமல் இருப்பதை வரவேற்பதாக கிறிஸ்துவ மத போத தலைவர்கள் தெரிவிக்கின்றனர். மதுரையின் எம்.பி., சு.வெங்கடேசன் நான்காண்டு காலமாக மக்கள் மத்தியில் வராமல் தற்போது ஓட்டு கேட்டு மட்டும்  வருகிறார் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்" என்றார்.

 

செல்லூர் ராஜூ நல்ல வார்த்தைகள் பேசினால் மழை பெய்யும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாரே ? என்ற கேள்விக்கு 

 

நான் நல்ல வார்த்தை பேசினால் நல்ல மழை பெய்யும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும். இதனை மீடியாக்கள் வெளியே கொண்டு போக வேண்டும். நான் நல்ல வார்த்தை பேசினால் மழை பெய்யும் என்றால் தினமும் மழை பெய்ய வேண்டும் அல்லவா!. அண்ணாமலை ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். கச்சத்தீவு குறித்து தற்போது கையில் எடுக்கும் பி.ஜே.பியினர் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தது என்று கேட்டேன். கச்சத்தீவை மீட்டிருக்க வேண்டாமா?. தேர்தல் நேரத்தில்தான் இது குறித்து பேச வேண்டுமா?. 1974 -ல் பி.கே.மூக்கைய தேவர் அவர்கள் இதன் பாதிப்பு குறித்து அப்போதே பேசி இருக்கிறார். கச்சத்தீவை மீட்பது குறித்தும் தெரிவித்துள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர்., அவர்கள் 26 வித கோரிக்கைகளையும் அளித்தார். கலைஞர் மீது குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து இருந்தார். அதில் ஒன்று கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என்ற தகவலும் அடங்கும். அதேபோல் அம்மா அவர்களும் லட்சத்தீவு மீட்டெடுப்பதற்கான தொடர் முயற்சியிலும் மேற்கொண்டார். ஆனால் வழக்குகளை கூட திமுக எடுத்துப் பார்க்கவில்லை. வரும் காலங்களில் ஆவது கச்சத்தீவினை மீட்பதற்காக தேசிய கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கவனத்தில் கொண்டு செல்ல தான் முடியும். இதெல்லாம் தெரியாமல் சொல்கிறார் அண்ணாமலை. அவர் குறித்து நான் எதுவும் தவறாக பேசவில்லை என்று பதிலளித்தார்.