Lok Sabha Elections 2024: 'வருத்தம்தான்! மக்கள் தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது' ராமதாஸ் அறிக்கை

மக்களவைத் தேர்தலின் முடிவுகளை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

மக்களவைத் தேர்தலின் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பொறுத்தவரை தி.மு.க.வே 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தருமபுரியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்தார். 

Continues below advertisement

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்ட பகுதியில் கூறியிருப்பதாவது, 

"தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. மக்கள் நலனுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து மக்களவைத் தேர்தலில் களமிறங்கி போராடிய பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்:

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் களத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மக்களின் மனநிலையை நன்றாக பார்க்க முடிந்தது. ஆனாலும், ஆளும் கூட்டணியே அனைத்து இடங்களிலும் வென்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனாலும், ஜனநாயகத்தில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். மக்களவைத் தேர்தலில் அவர்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி தலைவணங்கி ஏற்கிறது. அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.

தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்து மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவதை பாட்டாளி மக்கள் கட்சி அதன் முதன்மைக் கடமையாகக் கொண்டிருக்கிறது. அதே நிலை தொடரும். இனிவரும் காலங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சியின் போராட்டம் தொடரும். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதில் பா.ம.க. ஓயாது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்து:

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நிலைக்கு அழைத்துச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், அந்தப் பணியில் அவர்களுக்கு துணை நின்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தலில் பா.ம.க. இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், பணியாற்றிய பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைத்துக் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola