Stalin Met Chandrababu Naidu: முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் ஆந்திராவின் முதலமைச்சரக பொறுப்பேற்க உள்ள, சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துள்ளார்.


ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு:


முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தேன். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். தென்மாநில நலன்களுக்காகவும், நமது உரிமைக்காகவும்,  ஒன்றிய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் சந்திரபாபு நாயுடு உறுதியாக வாதிடுவார் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


 






கூட்டணி அரசியல் கணக்குகள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, I.N.D.I.A. கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவிலான தனிப்பெருன்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த இரண்டு முறை போன்று அல்லாமல், பாஜக இந்த முறை ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளை நாட வேண்டியுள்ளது. அதுவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமாரின் ஆதரவும் பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


I.N.D.I.A. கூட்டணி அழைப்பு:


நேற்றை நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். அதோடு, மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க அவர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, நேற்று மாலை I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதன் முடிவில், அரசியலமைப்பின் மீது உறுதி கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் I.N.D.I.A. கூட்டணியில் இணையலாம் என காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். இந்த சூழலில் தான், சந்திரபாபு நாயுடு உடனான சந்திப்பு பற்றி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.