செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு


மதுரை நாடாளுமன்ற அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று மதுரை நகைக் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு கோரினார். மேலும் காஜிமா தெருவில் வழிபாட்டுத் தல பகுதியிலும் பொதுமக்களை சந்தித்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்து ஆர்.டி.ஐ., மூலமாக கண்டறிந்ததாக அண்ணாமலை  தெரிவிக்கிறார். பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது புதிதாக கண்டறிவது போல பேசுகின்றது. எல்லாம் தெரிந்த மெத்த மேதாவிகள் போல பேசுகின்ற நபர்களுக்கு தற்போது தான் கச்சத்தீவு குறித்து தெரியுமா?. கச்சத்தீவு குறித்து அம்மா 2006ம் ஆண்டே ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தார். மீன் சுவையாக இருக்கிறது, என எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நபர்களை பூ போட்டா வரவேற்பார்களா? துப்பாக்கி வைத்து தான் சுடுவார்கள் என கலைஞர் அவர்கள் கொச்சையாக பேசினார்கள். இதை எல்லாத்தையும் எதிர்த்தவர் அம்மா.  


அண்ணாமலை படிக்கவில்லையா?


மெத்தை, மேதாவி, 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை இதையெல்லாம் ஏன் படிக்காமல் விட்டார். மீனவர் பாதிப்பு குறித்து எப்படி தெரியாமல் இருந்தார். கச்சத்தீவை கலைஞர் அவர்கள் 1974-ல் தாரைவார்த்தார், ஆனால் இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை இதனை ஆர்.டி.ஐ.,மூலம் தெரிந்துகொண்டேன் என்கிறார்.


இதற்கு ஆர்.டி.ஐ., தேவையா? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டிருக்கலாம். செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினைக்கு தெரியாமல் போச்சே” என்றார்.


அண்ணாமலை வண்டி தான் டெல்லிக்கு செல்லும் என்கிறாரே? என்ற கேள்விக்கு


எந்த வண்டி டெல்லிக்கு போகும், எந்த வண்டி டெல்லிக்கு போகாது என்று மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். இதனை தீர்மானிக்க அண்ணாமலை யார்? மக்கள் தான் எஜமானர்கள். அண்ணாமலை என்ன ஞானியா? அரசியலுக்காக எதுவேண்டும் என்றாலும் அண்ணாமலை பேசலாம். எந்த வண்டி டெல்லிக்கு போகும் என்று தேர்தலின் போது மக்கள் முடிவு செய்வார்கள் அப்போது பார்ப்போம்.


பி.ஜே.பி., குறித்து விமர்சனம் செய்யும் உங்களுக்கு அமலாக்கத்துறை மீது பயம் இல்லையா?


மடியில் கணமில்லை வலியில் பயமில்லை. அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சிறையே எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்பூட்டு சட்டமே எங்களுக்காக தான் கொண்டு வந்தான். இப்ப இல்லை அப்போது  அழகிரி அதிகாரத்தில் இருக்கும்போதே அவருக்கு எதிராக அரசியல் செய்தவன் நான். அழகிரி மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்தார். மதுரை மீனாட்சி, சொக்கநாதருக்கு மேலாகவே செல்வாக்கு உள்ளது, என்பது போல் அழகிரி ஆதரவாளர்கள் துதி பாடினார்கள். ஆனால் தற்போது அவர்கள் எல்லாரும் எங்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பசை இருக்கும் இடத்தை தேடி சென்று விட்டார்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Elections 2024: தேர்தல் ஆதாயத்திற்காக மீனவர்கள் மீது அக்கறை இருப்பது போல பாஜக நடிக்கிறது - செல்லூர் ராஜூ காட்டம் !


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்; என்ன நடந்தது? அடுத்து என்ன?