சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 29,28,122 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 3260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,766 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல், முத்திரைகள், மெழுகுவர்த்தி, மை, பேப்பர், பேனா, பென்சில், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உள்ளிட்ட 34 வகையான பொருட்கள் சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பணிகளை சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பெட்டிகள் சரியாக உள்ளதா, பெட்டியை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியரமான பிருந்தா தேவி கேட்டறிந்தார்.



நான்கு நாடாளுமன்ற தொகுதிகள்:


சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி என 6 தொகுதிகள் அடங்குகிறது. இதேபோல் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சங்ககிரி சட்டமன்ற தொகுதியும் இடம் பெறுகிறது.


வாக்காளர்கள் விவரம்:


சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 14,56,299 ஆண் வாக்காளர்கள், 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 இதர வாக்காளர்கள் என மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 53 ஆயிரத்து 391 வாக்காளர்கள் முதல் தலைமுறை வாக்காளர்களாகும். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 235 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் 15 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 


வாக்குச்சாவடிகள் விவரம்:


சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 1,766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும் 14 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் 300 நுன்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணியில் 13,410 அலுவலர்கள் மற்றும் 2,682 கூடுதல் அலுவலர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 92 பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசார், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என 5,632 பேர் ஈடுபட உள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 77.97% வாக்குகள் பதிவானது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.97% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.