தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களை மட்டுமே நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது  என  நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மனுதாரர் தனது கோரிக்கையை திருத்தி மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாநகராட்சியை சேர்ந்த செல்வகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.


 அதில், "மதுரை மாநகராட்சியின் 5 மண்டலங்களில், 1000 துப்புரவு பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் பலர்  நிரந்தரமாக பணியமர்த்தப்படவில்லை. நிதி பற்றாக்குறை என காரணம் காட்டி நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. அதோடு மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக்கழிப்பிடங்கள் பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதோடு, தூய்மை பணியும் ஒப்பந்த அடிப்படையில் விடப்படுகின்றன.


இதனால் தூய்மை பணியாளர்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கழிப்பிடங்களை நடத்தும் தனியார் அதிக லாபம் பெறும் அதேவேளை, அதனை தூய்மை செய்யும் துப்புரவு பணியாளர்கள் பொருளாதார நெருக்கடி நிலையிலேயே உள்ளனர்.


இது  குறித்து நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலனில்லை. ஆகவே மதுரை மாநகராட்சியில் தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ள தூய்மை பணி ஒப்பந்தங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். மேலும் தூய்மை பணியாற்றி வரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை கொண்டு சுய உதவி குழுக்களை உருவாக்கி, தூய்மைப் பணி ஒப்பந்தங்களையும் கழிப்பிட பராமரிப்பு ஒப்பந்தங்களையும் அவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு,  "தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது? அது ஜனநாயகத்துக்கு எதிரானது. ஆகவே அவ்வாறு உத்தரவிட இயலாது" என குறிப்பிட்டனர். அப்போது மனுதாரர் தரப்பில், மனுவில் கோரிக்கையை திருத்தம் செய்து தாக்கல் செய்வதாகவும், அதற்கு அவகாசம் வழங்கவும் கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.