தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. ஆறு தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்தி 6 ஆயிரத்து 96 நபர்களும் ஆண் வாக்காளர்களும் 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும் 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்ட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளது. நூறு வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1810 வாக்குச்சாவடிகள் உள்ளது.


இந்த சூழலில் வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வயதில் மூத்த வாக்காளர்களை வீடு தேடி சென்று அழைப்பிதழ் கொடுத்து 12 டி படிவத்தை கொடுத்து  வாக்களித்திட அழைக்கும் நிகழ்வு இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் விசுவாசம் என்ற எண்பத்தி ஏழு வயது முதியவர் வீட்டிற்கு திருநெல்வேலி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஐ.ஏ.ஸ்.  மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அலுவலர்கள் சீர்வரிசையுடன் பழங்கள் மற்றும் வெற்றிலை, பாக்கு சகீதம் அழைப்பிதழ் உடன் மேளதாளத்துடன் நேரில் சென்று வழங்கி விசுவாசம் என்பவரை வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் வாக்களிக்க வேண்டிய 12 டி விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அதிகாரி கிஷன் குமார் ஐஏஎஸ் கூறும்போது, வருகின்ற திருநெல்வேலி பாராளுமன்ற தேர்தலின் போது 100% வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக மூத்த வாக்காளர்களின் அவர்களின் இல்லம் தேடி வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறி அவர்களுக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டன. மேலும் அவர்கள் தேர்தல் வாக்களிக்கும் நாளில் வர முடியாத சூழ்நிலை இருந்தால் அவர்களுக்கு 12டி என்ற விண்ணப்ப படிவத்தையும் வழங்கினர். மேலும் குறைவான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வீடுகள் தோறும் விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி பாளையங்கோட்டை மேடை போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள், நடனங்கள் ஆகியவற்றுடன் ஒரு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்  நடைபெற உள்ளது. மேலும் முதல் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய தொழில் நுட்பத்தில் டிரோன்கள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.