தமிழகத்தில் காவிரி கடைமடை தொகுதியாக இருக்கும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதி கடந்த 1951-ம் ஆண்டு மாயூரம் தொகுதி என்று அழைக்கப்பட்டு இரட்டை உறுப்பினர் முறையில் இருந்து தொடங்கியது. அதன்பின்பு மயிலாடுதுறை தொகுதியாக மறுவியது. அப்போது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியதாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்பின்போது குத்தாலம் சட்டசபை தொகுதி நீக்கப்பட்டதால் அதற்கு பதிலாக பாபநாசம் சட்டசபை தொகுதி மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் இணைக்கப்பட்டு, கடந்த 2009 தேர்தலை சந்தித்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன.


சட்டமன்ற தொகுதிகள்: மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் உட்பட்டவை. அவை மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், மற்றும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகும்.


மயிலாடுதுறை – காங்கிரஸ்


சீர்காழி – திமுக


பூம்புகார் – திமுக


கும்பகோணம் – திமுக


பாபநாசம் – மமக


திருவிடைமருதூர் – திமுக


நட்சத்திர வேட்பாளராக திகழ்ந்தவர்




காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெட்ரோலித்துறை மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் இருந்துள்ளார். இவர் மயிலாடுதுறை தொகுதியில் 1991, 1999, 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.பியாக இருந்தார். கடந்த 2009 தேர்தலில் தோல்வியை தழுவினாலும் கட்சி மேலிடம் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை வழங்கியது.


மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள்



  • 1951 இரட்டைஉறுப்பினர் ஆனந்த நம்பியார் கம்யூனிஸ்ட், சந்தானம் காங்கிரஸ்

  • 1962 (தனி) மரகதம் சந்திரசேகர் காங்கிரஸ்

  • 1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க

  • 1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க

  • 1977 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரஸ்

  • 1980 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரஸ்

  • 1984 - பக்கீர் முகம்மது - காங்கிரஸ்

  • 1989 - பக்கீர் முகம்மது - காங்கிரஸ்

  • 1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்

  • 1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரஸ்

  • 1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரஸ்

  • 1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்

  • 2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரஸ்

  • 2009 - ஓ. எஸ். மணியன் - அதிமுக

  • 2014 - ஆர். கே. பாரதி மோகன் – அதிமுக

  • 2019 –ராமலிங்கம் – திமுக


48 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாடுதுறை தொகுதியில் திமுக:


மயிலாடுதுறை தொகுதியில் 1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுகவை சேர்ந்த சுப்ரவேலு எம்.பியாக இருந்தார். கடந்த 1984, 1989, 1991 ஆகிய 3 மக்களவைத் தேர்தல்களில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக தோல்வியை அடைந்தது. அதன்பின்பு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே இந்த தொகுதியை ஒதுக்கிவந்த நிலையில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் ராமலிங்கம் 2,61,314 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு முன்னர் 2 முறையாக தொடர்ந்து அதிமுக வசம் இருந்த இந்த தொகுதியை கடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது.


கடந்த தேர்தல் வரலாறு


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 14,84,346 மொத்த வாக்குகளில், 10,97,780 வாக்குகள் பதிவானது. இதில், 8231 வாக்குகள் நோட்டா என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5,99,292 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை விட 2,61,314 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். (ஆசைமணி பெற்ற வாக்குகள் 3,37,978). இந்த தேர்தலில் அமமுக வேட்பாளர் எஸ்.செந்தமிழன் 69,030 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 41,056 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 17,005 வாக்குகளையும் பெற்றனர். 27 பேர் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் ஆசைமணியை தவிர்த்து மற்ற 25 பேரும் டெபாசிட் இழந்தனர்.


தொகுதி வாக்காளர் விபரம்


2024 ஜனவரி 22-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,38,351 வாக்காளர்கள் உள்ளனர். அதன் விபரம் வருமாறு.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய மூன்று சட்டப்பேரவைத்  தொகுதிகளில் 3,71,043 ஆண்கள், 3,79,639 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 23 பேர் என மொத்தம் 7,50,705 வாக்காளர்கள் உள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,85,803 ஆண்கள், 4,01,797 பெண்கள் மற்றும் 46 இதரர் பேர் என மொத்தம் 7,87,646 வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிக அளவில் உள்ளனர்.


மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகள் :



  1. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தடை செய்ய போராடுவேன். (அரசு தடை செய்துள்ளது).


 



  1. டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவேன். (அதிமுக ஆட்சியில் சட்டமாக்கப்பட்டுள்ளது)


 



  1. மயிலாடுதுறை-தரங்கம்பாடி இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். (நிறைவேற்றப்படவில்லை)


 



  1. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நகரும் மின் படிக்கட்டு அமைக்கப்படும். (மயிலாடுதுறை எம்பி 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் ரயில்வே துறை அவர்களது நிதியில் செய்து தருவதாக எம்.பி நிதியை மறுத்துவிட்டனர்)


 



  1. மாப்படுகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். (நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது)


 



  1. பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் மகாமக திருவிழாவில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க வசதியாக கும்பகோணம் ரயில் நிலையத்தை ரீ-மாடலிங் செய்ய வலியுறுத்துவேன். (அம்ரித் பாரத் திட்டத்தில் பணிகள் நடந்து வருகிறது).


 



  1. காங்கேயன்பேட்டையில் சப்வே அமைப்பேன். (நிலுவையில் உள்ளது).


 



  1. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 24 கடலோர கிராமங்களில் குடிநீர் திட்ட புனரமைப்பு வசதி ஏற்படுத்துவேன். (செய்து தரப்பட்டுள்ளது).


தொகுதியின் நீண்ட கால கோரிக்கைகள்


* கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய விழாவாக அறிவித்து, அரசு எடுத்து நடத்த வேண்டும்.


* இரு வழிப்பாதைகள் அமைத்து  ரயில் சேவையை விரிவாக்கம் வேண்டும். 


* மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை ரயில் சேவை தொடங்க வேண்டும்.


* பக்கிங்காம் கால்வாயை முறையாக தூர்வாரி நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும். 


* பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுலாத் தலங்களை நவீன வசதியுடன் பன்னாட்டு  தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் .


* மண் அரிப்பை தடுக்க கடற்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.


* தொகுதியில் உள்ள பழைய, புதிய மீன்பிடித் துறைமுகங்களை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டும்.


* தலைஞாயிறு சர்க்கரை ஆலையை சீரமைத்து மீண்டும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.  


* கொள்ளிடம் ஆற்றில் மாதிரிவேளூர்- நலன்புத்தூர், அளக்குடி- திருக்கழிப்பாலை இடையே 2 இடங்களில் கதவனை அமைக்க வேண்டும்.


* கடல் நீர் உட்புகாதவாறு உப்பனாறுகளில் கதவணைகள் அமைக்க வேண்டும்.


* 4 வழி சாலை பணிகளை விரைவு படுத்த வேண்டும்.


* விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்.


* நெசவு, உலோகப் பொருட்கள், மண்பாண்டம் தயாரிப்பு தொழில்களை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் வேண்டும்.


* குத்தாலம் பகுதியில் தொழிற்சாலை மாசுகளை தடை செய்ய வேண்டும்.


* விவசாய விளை பொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.


* ஆறு, வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பங்களிப்புடன் முழுமையாக தூர்வார வேண்டும்.


* திருமுல்லைவாசல்- கீழமூவர்கரை இடையே நீண்ட ஆண்டுகளாக இணைக்கப்படாமல் உள்ள பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும்,


* மயிலாடுதுறை அருகே மாப்படுகை, வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.


* மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களுக்கு தடையின்றி இன்றி கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க வேண்டும்.


* செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தை பிரிக்க வேண்டும்.


* சீர்காழியை பிரித்து கொள்ளிடம் புதிய தாலுக்கா உருவாக்க வேண்டும்.


* மயிலாடுதுறை, சீர்காழி நகரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரிங் ரோடுகள் அமைக்க வேண்டும்.


* சீர்காழி பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.


* மயிலாடுதுறை, சீர்காழி நகர் பகுதிகளுக்கு முழுமையான கொள்ளிடம் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.


* மயிலாடுதுறை பாதாள சாக்கடை சீர்கேட்டை சரி செய்ய வேண்டும்.


* பெருந்தோட்டம் திருவாலி ஏரிகளை சீரமைத்து  சுற்றுலா தளமாக்க வேண்டும்.


* கொள்ளிடம் ஆற்றின் கரையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலங்களாக நிலுவையில் உள்ளது.


 


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியின் சிறப்புகள்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி சிறப்பு என்பது கோயில்கள். தொன்மையையும், சிற்பக்கலையின் நுட்பத்தையும் உணர்த்தும் ஆயிரக்கணக்கான கோயில்களை தன்னகத்தே கொண்டது மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி. மேலும் நவக்கிரக தலங்களில் இரண்டைத் தவிர அனைத்தும் இந்த தொகுதியிலேயே உள்ளன. அதன் விபரம்.




மாயூரநாதர் கோயில், மயிலாடுதுறை


பரிமளரெங்கநாதர் கோயில், திருஇந்தளுர், மயிலாடுதுறை


சட்டநாதர் கோயில், சீர்காழி


சூரியனார்கோயில், திருவிடைமருதூர் (நவக்கிரக ஸ்தலம்-சூரியன்)


வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி தொகுதி (நவக்கிரக ஸ்தலம்-செவ்வாய்)


திருவெண்காடு, (நவக்கிரக ஸ்தலம்-புதன்)


ஆலங்குடி, கும்பகோணம் (நவக்கிரக ஸ்தலம்-குரு)


கஞ்சனூர், திருவிடைமருதூர் (நவக்கிரக ஸ்தலம்-சுக்கிரன்)


கீழப்பெரும்பள்ளம், பூம்புகார் தொகுதி (நவக்கிரக ஸ்தலம்-கேது)


திருநாகேஸ்வரம்


கும்பேஸ்வரர் கோயில், கும்பகோணம் 


திருக்கருக்காவூர், பாபநாசம் .


மயூரநாதர் கோயில்


தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட பார்வதி தேவி தனது சாபங்களை போக்கி கொள்ள மயில் வடிவம் கொண்டு, காசிக்கு நிகரான புண்ணியம் கொண்ட மயிலாடுதுறை துலாகட்ட காவிரில் ஜப்பசி மாதம்  தவம் இருந்து புனித நீராடி இறைவனை பிராத்தித்து சாபங்களை போக்கி கொண்டதாக ஐதீகம். மயில் உருவம் கொண்டு ஆடியதலம் துறைலேயே இவ்வூர் இறைவன் மயூரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.


துலா உற்சவ திருவிழா


கங்கை முதலான புண்ணிய நதிகள் மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் துலா மாதமான ஜப்பசி மாதத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டதாக ஜதீகம். இச்சிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் ஜப்பசி மாதம் 30 நாட்களும் துலாகட்ட காவிரியில் துலா உற்சவ திருவிழா நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள்.


மகா புஷ்கரம்


துலாம் ராசிக்கு உரிய  நதியாக காவிரி போற்றப்படுகிறது. எனவே துலாம் மாதமான ஜப்பசி மாதத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு 144ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகா புஷ்கரம் கொண்டாப்பட்டது. இதில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 20 லட்சம் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.


நூறு வருட பாரம்பரியம் கொண்ட சித்தர்காடு கருவாட்டு சந்தை:


மயிலாடுதுறை அருகே சித்தர்காட்டில் நூறு ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சித்தர்காடு கருவாட்டுச் சந்தை அமைந்துள்ளது. இங்கு நாகை மாவட்ட கருவாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் தங்கள் கருவாடுகளை சந்தைப்படுத்துகின்றனர். இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுவியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இங்கு நடைபெறும் வியாபாரத்தில், மருத்துவ குணம் நிறைந்த கருவாடுகளும்; கிடைக்கும் என்பதால் அன்றைய தினம் இப்பகுதி கருவாட்டு பிரியர்களால் களை கட்டும். 


முக்கிய உணவு


மயிலாடுதுறை


கருவாடு உணவு வகைகள், காளியாகுடி சாம்பார் சாதம்


கும்பகோணம்


பில்டர் காபி, 


முக்கிய தொழில்கள்


மயிலாடுதுறை, சீர்காழி விவசாயம் மற்றும் விவசாய சார்ந்த தொழில்கள், தரங்கம்பாடி, பூம்கார் மீன்பிடித்தொழில், கும்பகோணம் நச்சரியார் கோவில் பித்தளை பாத்திரம் தயாரித்தல் தொழில்  திருபவனம் பட்டு உற்பத்தி தொழில்.


தற்போது திமுகவை சேர்ந்த ராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் நிலையில் இத்தொகுதியினை அதிக முறை வென்ற காங்கிரஸ் கட்சியினர் இந்ததொகுதியை மீண்டும் எதிர்பார்ப்பதால் இம்முறை இந்த தொகுதி காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.