காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் மறைமலைநகர் பகுதியில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


மக்களவைத் தேர்தல்


மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளை சார்ந்த திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது .





மறைமலைநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பு


அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வம்  இன்று மறைமலைநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மறைமலைநகர், சாமியார் கேட், கடம்பூர், பேரமனூர் உள்ளிட்ட இருபதற்கும் மேற்பட்ட பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 




பிரம்மாண்ட வரவேற்பு


தொடர்ந்து கடம்பூர் பகுதியில் ஆதிதிராவிட மாவட்ட நலக்குழு தலைவர் கடம்பூர் செ. முருகேசன் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது .‌ 200 கிலோ எடை மற்றும் 18 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட மாலையை கிரேன் மூலம் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். வழி எங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் கூட்டணி கட்சியினர் கொடியுடன் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்த பிரச்சாரத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூடுவாஞ்சேரி பகுதிகளிலும் வாக்குகளை சேகரிக்க உள்ளார்.







தொடரும் பிரச்சாரங்கள் 


தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர்.


தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.